
அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
அதிசயம் ஆன வடிவுடையாள் - அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள்.
அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி - அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள்
துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் - அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர்.
தம் மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.
அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள். அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.
***
ஆனனம் - திருமுகம். எடுத்துக்காட்டுகள்: கஜானனன் - யானைமுகன்; ஷடானனன் - ஆறுமுகன்; பஞ்சானனன் - ஐந்துமுகன் (சிவன்).
சயம் - ஜெயம் - வெற்றி
அபசயம் - அபஜெயம் - தோல்வி
மதி சயம் - மதி ஜலம் - மதி நீர்
மதி சயம் - மதியை வெற்றி