Monday, December 31, 2007

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் (பாடல் 71)


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி - இவளுடைய அழகிற்கு ஒப்புமையாக யாரும் எதுவும் இல்லாதபடி பெரும் பேரழகு கொண்டிருக்கும் தலைவி

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - அரிய திருமறைகள் இவளது திருப்பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் போற்றுவதால் அவற்றின் புகழ்ச்சியில் பழகிப் பழகி சிவந்த தாமரைப்பாதங்கள் உடையவள்

பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க - குளிர்ந்த நிலவின் குழந்தையை (இளம்பிறையை) திருமுடியில் தாங்கியிருக்கும் மென்மையான பச்சை நிறத்தவளாக அன்னை இருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - உலக வாழ்க்கையில் எதையோ இழந்து நின்றாலும் அந்த இழவை நினைந்து இரங்காமல் இருப்பாய் நெஞ்சே; அன்னையிருக்க ஒரு குறையும் உனக்கு இல்லை.

மனத்தில் ஏதேனும் குறை ஏற்படும் போது இந்தப் பாடலைப் படிக்கலாம் போலிருக்கிறது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரழகே என்று நிறைய இந்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கியது. இந்தப் பாடல் என் குறையே என்று நிறைய அடுத்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அழகுக்கு, பழகி, குழவி, இழவுற்று

மோனை: அழகுக்கு - அருமறைகள்; பழகி - பதாம்புயத்தாள் - பனிமாமதியின், குழவி - கோமளயாமளை - கொம்பிருக்க, இழவுற்று - இரங்கேல் - என்குறையே

Friday, December 21, 2007

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் (பாடல் 70)


கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் - என் கண்கள் மகிழ்வு எய்திக் களிக்கும் படி நான் கண்டு கொண்டேன்


கடம்பாடவியில் - கடம்ப வனத்தில்


பண் களிக்கும் குரல் - இசை விரும்பி உறைகின்ற குரலையும்


வீணையும் கையும் - வீணையை ஏந்திய கைகளையும்

பயோதரமும் - அழகிய திருவயிற்றையும்

மண் களிக்கும் பச்சை வண்ணமும் - மண்மகள் விரும்பி மகிழும் பச்சை நிறமும்

ஆகி - பெற்று

மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே - மதங்கர குலத்தில் தோன்றிய என் தலைவியின் பேரழகையே.

அம்மையின் திருமேனி அழகைப் போற்றுகிறார் இந்தப் பாடலில். பச்சை நிறம் செழுமையின் வண்ணமாதலால் மண்களிக்கும் வண்ணம் என்கிறார். பண் பாடும் குரல் என்று சொல்வார்கள்; இவரோ பண்ணே களிக்கும் குரல் என்கிறார். கடம்பவனத்தையும் பச்சை நிறத்தையும் சொன்னதால் இது மீனாட்சியம்மையைப் போற்றும் பாடல் என்று நினைக்கிறேன். மதங்கர் குலம் என்பது எந்தக் குலம்? மதங்கரிஷி என்ற ஒரு முனிவரைப் பற்றி படித்திருக்கிறேன். அவர் குலத்தில் அன்னை தோன்றினாளா? சொல்லுங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கடைக்கண்களே என்று நிறைய இந்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரழகே என்று நிறைய அடுத்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கண், பண், மண், பெண்

மோனை: கண் - களிக்கும் - கண்டு - கொண்டேன் - கடம்பாடவி, பண் - பயோதரமும், மண் - மதங்கர், பெண் - பெருமாட்டி - பேரழகே.

Tuesday, December 18, 2007

தனம் தரும் கல்வி தரும் (பாடல் 69)


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


தனம் தரும் - எல்லாவிதமான செல்வங்களும் தரும்


கல்வி தரும் - எல்லாவிதமான கல்வியையும் தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் - என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்


தெய்வ வடிவும் தரும் - தெய்வீகமான உருவத்தையும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்


நல்லன எல்லாம் தரும் - இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்

அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் - எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

மிகவும் பிரபலமான பாடல் இது. அபிராமி அந்தாதி பாடல் என்று தெரியாமலேயே பலருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும். அருமையான பாடலும் கூட.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தனமில்லையே என்று நிறைய இந்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கடைக்கண்களே என்று நிறைய அடுத்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தனம், மனம், இனம், கனம்

மோனை: தனம் - தரும் - தளர்வு, மனம் - வடிவும் - வஞ்சம், இனம் - என்பவர்க்கே, கனம் - கடைக்கண்களே.

Friday, December 14, 2007

சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் (பாடல் 68)


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் - உலகமும், நீரும், நெருப்பும், காற்றும், எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயமும்


ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் - இவற்றின் தன்மையாக நிற்கும் நறுமணம், சுவை, ஒளி, உணர்வு, ஒலி இவை எல்லாம் ஒன்றுபட்டுச்


சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே - சேரும் சிறிய திருவடிகளை உடைய எங்கள் தலைவி சிவகாம சுந்தரியின் திருவடியிலேயே


சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே - சார்ந்து நிற்கும் புண்ணியம்/பாக்கியம் உடையவர்கள் பெறாத செல்வம் எதுவும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஐம்பூதங்களாகவும் அவற்றின் தன்மைகளான ஐம்புலன் உணர்வுகளாகவும் ஒன்று பட்டு நிற்கும் அன்னையின் திருவடிகளை அடைந்த பின் இந்தப் பிரபஞ்சம் எல்லாமும் கிடைத்ததாகுமே. அதனால் தான் அவர் பெறாத தனம் பிறிதில்லை என்கிறார்.

***
அருஞ்சொற்பொருள்:

பார் - உலகம்
புனல் - நீர்
கனல் - நெருப்பு
கால் - காற்று
விசும்பு - ஆகாயம்
முருகு - நறுமணம்
ஊறு - உணர்வு (தொடுதல் உணர்வு)
சீறடி - சிறிய அழகிய திருவடி

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாரெங்குமே என்று நிறைய இந்தப் பாடல் பாரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தனமில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பாரும், ஊரும், சேரும், சாரும்

மோனை: பாரும் - புனலும் - படர்விசும்பும், ஊரும் - ஒளி - ஊறு - ஒலி - ஒன்றுபடச், சேரும் - சிவகாமசுந்தரி - சீறடிக்கே, சாரும் - தவம் - தனம்.

Tuesday, November 27, 2007

மின்னல் போலும் உன் திருவுருவம் (பாடல் 67)


தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே


தோத்திரம் செய்து தொழுது - உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுது

மின் போலும் நின் தோற்றம் - மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை

ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் - ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள்

வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி - அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று

நாளும் - தினந்தோறும்

குடில்கள் தொறும் - வீடுகள் தோறும்

பாத்திரம் கொண்டு - பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு

பலிக்கு உழலா நிற்பர் - பிச்சைக்குத் திரிவார்கள்

பார் எங்குமே - உலகமெங்குமே

***

இந்தப் பாடலைப் படிக்க கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. சாபம் இடுவது போன்ற தொனி.

அருஞ்சொற்பொருள்:

வண்மை - வள்ளன்மை; வன்மை என்பதற்கும் வண்மை என்பதற்கும் உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். வன்மை என்பது வலிமை என்ற பொருள் தரும். வண்மை வள்ளல்தன்மையைக் குறிக்கும்.

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தோத்திரமே என்று நிறைய இந்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாரெங்குமே என்று நிறைய அடுத்தப் பாடல் பாரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தோத்திரம், மாத்திரை, கோத்திரம், பாத்திரம்

மோனை: தோத்திரம் - தொழுது - தோற்றம், மாத்திரை - மனத்தில், கோத்திரம் - கல்வி - குலம் - குணம் - குன்றி - குடில்கள், பாத்திரம் - பலிக்கு - பார்.

Wednesday, November 21, 2007

நின் நாமங்கள் தோத்திரமே (பாடல் 66)


வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே


வல்லபம் ஒன்றறியேன் - பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை.


சிறியேன் - மிகச் சிறியவன்


நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் - சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான்.


பசும்பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் - பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே


வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

***

சென்ற இடுகையில் வாரியார் சுவாமிகளின் கருத்தை வந்து சொன்னார் இராகவன். நாம் என்ன தான் புகழ்ந்தாலும் அது நம்மை வைத்துப் பார்க்கும் போது பெரிய செயல்களாக இருந்தாலும் இறைச்சக்தியின் பெருமைக்கு முன்னர் அது மிக மிக சாதாரணமானதொன்றாக இருக்கும். அதே போன்ற கருத்தினை நம்மாழ்வாரும் சொல்லியிருக்கிறார் என்று நான் இராகவனுக்குப் பதில் உரைக்கும் போது சொன்னேன். அவற்றைச் சென்ற இடுகையின் பின்னூட்டங்களில் பார்க்கலாம்.

இப்படி நாங்கள் பேசப்போகின்றோம் என்பது அன்றைக்கே அபிராமி பட்டருக்குத் தெரிந்துவிட்டது போலும். இந்தப் பாடலில் 'வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்' என்று அந்தக் கருத்தை அவரே சொல்லிக் கொள்கிறார். அன்னையின் பெருமைக்கு முன்னர் நாம் என்ன தான் அவளைப் போற்றிப் பாடினாலும் அவை எல்லாம் மிகச் சாதாரணமே என்பதை 'சொல் அவமாயினும்' என்பதன் மூலம் சொல்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

வல்லபம்: சாமர்த்தியம், வல்லமை

பல்லவம்: தளிர், அம்பு. இங்கே தளிர் என்னும் பொருள் பொருந்துகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வல்லபமே என்று நிறைய இந்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தோத்திரமே என்று நிறைய அடுத்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கும். இப்படி ஒரு பாட்டின் முடிவு அடுத்தப் பாட்டின் தொடக்கமாக அமைத்துத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வல்லபம், பல்லவம், வில்லவர், சொல்லவம்

மோனை: வல்லபம் - மலரடி, பல்லவம் - பற்று - பசும் - பொற் - பொருப்பு, வில்லவர் - வீற்றிருப்பாய் - வினையேன், சொல் - திரு - தோத்திரமே.

Saturday, November 17, 2007

ஆறுமுகன் மூதறிவின் மகன் (பாடல் 65)


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே


ககனமும் வானும் புவனமும் காண - பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி

விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு - கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு

தடக்கையும் - நீண்ட வலிய கைகளையும்

செம்முகனும் - சிவந்த திருமுகமும்

முந்நான்கு - பன்னிரு கரங்களும்

இருமூன்று - ஆறுமுகங்களும்

எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது - என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது

அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?!


***

மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று எல்லோரும் மயங்கி இருக்கும் போதில் அந்த மன்மதனை எல்லோரும் காணும் படி வென்றதைத் தான் எல்லோரும் வியக்கும் படி தகனம் செய்தார் என்று கூறுகிறார். அப்படி மன்மதனைத் தகனம் செய்த தவப்பெருமானே அந்த மன்மதனை விஞ்சும் அழகுடைய திருக்குமரனைப் பெற்றார் என்று வியக்கிறார். அப்படிப் பெறும் வல்லமையும் அம்மையே உன்னால் தான் ஏற்பட்டது என்று அன்னையைப் போற்றுகிறார். ஒரே கல்லில் மூன்று மாங்காய். அழகில் சிறந்தவன் திருமுருகன் என்று மகனைப் போற்றியாயிற்று; யாராலும் வெல்ல இயலாத மன்மதனைத் தகனம் செய்தார் என்று அப்பனைப் போற்றியாயிற்று; அந்த அப்பனுக்கும் சக்தி வந்தது அம்மையே உன்னால் தான் என்று அன்னையையும் போற்றியாயிற்று.

காமன் அழிந்து போகவில்லை. அவன் உடல் மட்டுமே காணாமல் போனது. அவன் உடலற்றவனாக அனங்கனாக் (அ+அங்கன்) வாழ்கிறான் என்பதை 'காமன் அங்கம்' தகனம் செய்யப்பட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால் மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கியிருப்பவர்கள், வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று மண்ணவரையும் விண்ணவரையும் கூறிவிட்டு, பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார் 'ககனம்' என்பதன் மூலம்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ககனமுமே என்று நிறைய இந்தப் பாடல் ககனமும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வல்லபமே என்று நிறைய அடுத்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கும்.

எதுகை: ககனமும், தகனம், முகனும், மகனும்

மோனை: ககனமும் - காண - காமன், தகனம் - தவப்பெருமாற்கு - தடக்கையும், முகனும் - முந்நான்கு - மூன்று - மூதறிவின், மகனும் - வல்லி - வல்லபமே.

Thursday, November 08, 2007

உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் (பாடல் 64)


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் - தம்மை வணங்குபவர்களிடமிருந்து கையுறைகளை (காணிக்கைகளை) விரும்பிக் கவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளாத, அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன்


உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் - இந்தக் குறைகள் இல்லாத உன்னிடம் அன்பு பூண்டு கொண்டேன்


நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் - என்றும் எப்போதும் உன் புகழையே போற்றிப் பாடுவேன்


திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன்.

***

தாம் வணங்கும் தெய்வத்தை அன்றி மற்ற தெய்வங்களை 'வீணே பலி கவர் தெய்வங்கள்' என்று சொல்வது ஒவ்வொரு பக்தரின் இயற்கை. 'சர்வ தர்மான் பரித்யஜ்ய' என்று கீதையில் கண்ணன் சொல்லுவதையே இங்கு அபிராமி பட்டர் சொல்கிறார் என்று என் ஆசிரியர் ஒருவர் சொல்வார். திருப்பாவையிலும் 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்று ஆண்டாள் சொல்வதும் இதுவே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வீணருக்கே என்று நிறைய இந்தப் பாடல் வீணே என்று தொடங்கியது. இந்தப் பாடல் ககனமுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ககனமும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வீணே, பூணேன், பேணேன், காணேன்

மோனை: வீணே - மிக்க, பூணேன் - பூண்டுகொண்டேன் - புகழ்ச்சி, பேணேன் - பொழுதும் - ப்ரகாசம், காணேன் - ககனமுமே.

Sunday, November 04, 2007

தேறும்படி சில ஏதுகள் காட்டுவாள் (பாடல் 63)


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் - சென்று அடைய வேண்டிய இடத்திற்கு தேறிச் செல்லும் படி சில வழிகள் காட்டுபவள் அபிராமி அன்னை

சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் - அப்படி அவள் காட்டிய வழிகளில் ஆறு சமயங்கள் முதன்மையானவை. அவற்றை அருளி அவற்றின் தலைவியாய் இவள் இருப்பது அறிந்திருந்தும்

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - வேறு சமயம் உயர்ந்தது என்று கொண்டாடும் வீணர்கள் செய்வது

குன்றில் கொட்டும் தறி குறிக்கும் - மலையை ஒரு சிறு தடி கொண்டு தகர்க்க முயல்வார்களை ஒத்தது.

***

ஆறு சமயங்களாவன: சூரியனை வணங்கும் சௌரம், குமரனை வணங்கும் கௌமாரம், சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், சக்தியை வணங்கும் சாக்தம், கணபதியை வணங்கும் காணபத்யம்

***

அந்தாதித் தொடை:சென்ற பாடல் சிந்தையதே என்று நிறைய இந்தப் பாடல் தேறும்படிக்கு என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் வீணருக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் வீணே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தேறும், கூறும், ஆறும், வேறும்

மோனை: தேறும் - சில - செல்கதிக்கு, கூறும் - குன்றில் - கொட்டும் - குறிக்கும், ஆறும் - அறிந்திருந்தும், வேறும் - வீணருக்கே

Sunday, October 28, 2007

கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே (பாடல் 62)


தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

தங்கச் சிலை கொண்டு - பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு

தானவர் முப்புரம் சாய்த்து - திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி

மத வெங்கண் கரி உரி போர்த்த - மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட

செஞ்சேவகன் - சிவந்தவனாம் சிவபெருமானின்

மெய்யடையக் - திருமேனியை அடைய

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி - கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே!

கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே - சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன.

***

திரிபுர அசுரர்களின் முப்புரத்தை மேரு எனும் பொன் வில் கொண்டு சிரித்தெரிக் கொளுத்தியும் கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்து அணிந்தும் பெருமை கொண்ட சிவந்தவன் உன் கையில் இருக்கும் மதனின் கரும்பு வில்லிலும் மலர் அம்புகளிலும் அந்த அம்புகளை விட மென்மையான உன் கொங்கைகள் எனும் மலர்க் கணையால் உன்னை தன் திருவுடலின் பாதியாகக் கொண்டான். அப்படிப் பெருமை கொண்ட உன் கையில் இருக்கும் கரும்பிலும் மலரிலும் என் மனம் நிற்கிறது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்கச்சியே என்று நிறைய இந்தப் பாடல் தங்கச்சிலை என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிந்தையதே என்று நிறைய அடுத்தப் பாடல் தேறும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தங்கச்சிலை, வெங்கண், கொங்கை, செங்கை

மோனை: தங்கச்சிலை - தானவர், கொங்கை - குரும்பை - குறியிட்ட - கோகனக, செங்கை - சிந்தையதே.

Sunday, October 21, 2007

செங்கண்மால் திருத்தங்கச்சியே (பாடல் 61)


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே

நாயேனையும் - நாயை விட ஈனனான என்னையும்

இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் - என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால், என்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லாதபடி, என்னை ஆண்டு கொண்டாய்
நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் - எந்தக் காரணமும் பார்க்காத கருணையில் சிறந்தவள் நீ என்ற உன் உன்மை நிலையையும் உள்ள வண்ணம் அறியும் அறிவினையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்
என்ன பேறு பெற்றேன் - இந்த அறிவினை உன் அருளால் பெற என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே - என் தாயே! மலையரசன் மகளே! அடியார்களுக்கு அருளும் கருணையால் சிவந்த கண்களையுடைய திருமாலவனின் திருத்தங்கச்சியே!

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நாய்த்தலையே என்று நிறைய இந்தப் பாடல் நாயேனையும் என்று தொடங்கியது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நாயேனையும், நீயே, பேயேன், தாயே

மோனை: நாயேனையும் - நயந்து, நீயே - நினைவின்றி - நின்னை, பேயேன் - பேறு - பெற்றேன், தாயே - திருத்தங்கச்சியே.

Thursday, October 18, 2007

சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே (பாடல் 60)


பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே

பாலினும் சொல் இனியாய் - பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே!

பனி மாமலர்ப் பாதம் வைக்க - உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க

மாலினும் - திருமாலை விட
தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் - எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட

கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் - கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விட

சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே - நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? (விரும்பி என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தாயே?!)

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாலரையே என்று நிறைவு பெற்றது. இந்தப் பாடல் பாலினும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாய்த்தலையே என்று நிறைய நாயேனையும் என்று அடுத்தப் பாடல் தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பாலினும், மாலினும், மேலினும், நாலினும்

மோனை: பாலினும் - பனி - பாதம், மாலினும் - வணங்க - வார்சடையின், மேலினும் - மெய்ப்பீடம், நாலினும் - நன்றோ - நாய்த்தலையே

Saturday, October 13, 2007

தஞ்சம் பிறிது இல்லை (பாடல் 59)


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று - உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும்


உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் - உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை.


ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் - பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக்க கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே!


அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே - பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே.

***

அபிராமி அன்னையிடம் நான் எத்தனை தவறு செய்திருந்தாலும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். மானிடப் பெண்களே தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு கருணையுடன் இருக்கும் போது எல்லா உலகிற்கும் தாயான அன்னையே நீ எவ்வளவு கருணையுடன் இருப்பாய் என்று தெரிகிறதே என்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

சிலை: வில்

ஒற்றை நீள்சிலை: நிகரில்லாத என்று சொல்ல ஒற்றை என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஏகம் அத்விதீயம் (ஒன்றே இரண்டில்லாதது - தனக்கு நிகராக இன்னொன்று இல்லாதது) என்று வேதங்களும் சொல்கின்றன.

அஞ்சு அம்பும் - மற்றவர் அஞ்சுகின்ற படி இருக்கும் அம்புகளும் எனலாம்; ஐந்து அம்புகளும் எனலாம். ஐந்து மலர்க்கணைகளை அன்னை தாங்கியிருக்கிறாள் என்பது மற்ற இடங்களில் சொல்லப்பட்டது. ஐந்து என்பதன் பேச்சு வழக்கான அஞ்சு என்ற சொல்லை இங்கே புழங்குகிறார் அபிராமி பட்டர்.

இக்கு - கரும்பு

அலர் - மலர்

மெல்லடியார் அடியார் - சிலேடை; மெல்லிய பாதங்களை உடையவர் என்று முதற்சொல்லிலும் அடிக்க மாட்டார்கள் என்று இரண்டாம் சொல்லிலும் அடியார் என்ற சொல்லைப் புழங்குகிறார்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தஞ்சமுமே என்று நிறைய இந்தப் பாடல் தஞ்சம் பிறிதின்றி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாலரையே என்று முடிய அடுத்தப் பாடல் பாலினும் என்று தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தஞ்சம், நெஞ்சம், அஞ்சம்பும், பஞ்சஞ்சு

மோனை: தஞ்சம் - தவநெறிக்கே, நெஞ்சம் - நினைக்கின்றிலேன் - நீள்சிலையும், அஞ்சம்பும் - அலராகி - அறியார், பஞ்சஞ்சு - பாலரையே.

Sunday, October 07, 2007

சரணாம்புயம் அன்றி ஒரு தஞ்சமும் இல்லை (பாடல் 58)


அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

அருணாம்புயத்தும் - அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்


என் சித்தாம்புயத்தும் - என் மனமெனும் தாமரையிடத்தும்

அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் - அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின்


தகை சேர் நயனக் கருண அம்புயமும் - பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும்


வதன அம்புயமும் - திருமுகம் என்னும் தாமரையும்

கர அம்புயமும் - திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்

சரண அம்புயமும் - திருவடிகள் என்னும் தாமரைகளும்

அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்

***

அன்னையின் திருவுருவம் தாமரைப் பொய்கையை ஒத்து இருக்கிறது போலும். அம்புயம் என்பது அம்புஜம் என்னும் வடசொல்லின் திரிபு என்பர். அம்பு - நீர்; ஜ: - பிறந்தது; நீரில் பிறந்தது என்று பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் அருளே என்று நிறைய இந்தப் பாடல் அருணாம்புயம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தஞ்சமுமே என்று முடிய அடுத்தப் பாடல் தஞ்சம் பிறிது இல்லை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அருணாம்புயம், தருணாம்புயம், கருணாம்புயம், சரணாம்புயம்

மோனை: அருணாம்புயம் - அமர்ந்திருக்கும், தருணாம்புயம் - தையல் - தகை, கருணாம்புயம் - கராம்புயம், சரணாம்புயம் - தஞ்சமுமே.

Saturday, September 29, 2007

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் (பாடல் 57)



ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே



ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு - சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி நெல்லைக் கொண்டு

அண்டம் எல்லாம் உய்ய - உலகம் எல்லாம் உய்யும் படி

அறம் செயும் - அறங்கள் செய்யும்

உன்னையும் போற்றி - உன்னைப் போற்றிப் பாடிவிட்டு

ஒருவர் தம் பால் - பின் வேறொருவரிரம் சென்று

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று - நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் - உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே!

இதுவோ உந்தன் மெய்யருளே - இது தான் உந்தன் மெய்யருளா?

***

உலக மக்கள் எல்லோருக்கும் படி அளப்பவளாக இருக்கும் உன்னைப் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருந்த என்னை வேறொருவரிடம் சென்று படி அளக்கச் சொல்லிக் கேட்க வைக்கலாமா? அவர்களைப் புகழ்ந்து பொய்யாக நான் பாடலாமா? இப்படி வைப்பது உனக்கு அழகா?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஐயனுமே என்று நிறைய இந்தப் பாடல் ஐயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் அருளே என்று நிறைய அடுத்தப் பாடல் அருணாம்புயத்தும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஐயன், உய்ய, செய்ய, மெய்யும்

மோனை: ஐயன் - அளந்த - அண்டம், உய்ய - உன்னையும் - ஒருவர், செய்ய - சென்று, மெய்யும் - மெய்யருளே.

Sunday, September 16, 2007

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் (பாடல் 56)


ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே

ஒன்றாய் அரும்பி - ஒரே பொருளாய் முதலில் அரும்பி

பலவாய் விரிந்து - பல பொருட்களாய் விரிந்து

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் - இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள் - அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்)

என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு - (அப்படிப்பட்டவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள்.


இப்பொருள் அறிவார் - (அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள்

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே - பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஒன்றில்லையே என்று நிறைய இந்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஐயனுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ஐயன் அளந்தபடி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஒன்றாய், நின்றாள், பொன்றாது, அன்றாலிலை.

மோனை: ஒன்றாய் - உலகெங்குமாய், நின்றாள் - நீங்கி - நிற்பாள் - நெஞ்சினுள்ளே, பொன்றாது - புரிகின்றவாறு - பொருள், அன்று - ஆலிலை - ஐயனுமே.

Saturday, September 08, 2007

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது (பாடல் 55)


மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே


மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் - ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை

அகம் மகிழ் ஆனந்தவல்லி - என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை

அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை - எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முதல்வியானவளை

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே - உலக மக்கள் நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சேர்மின்களே என்று முடிவுற இந்தப்பாடல் மின்னாயிரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஒன்றில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மின்னாயிரம், அன்னாள், முன்னாய், உன்னாது

மோனை: மின்னாயிரம் - மெய் - வடிவு - விளங்குகின்றது, அன்னாள் - அகம் - ஆனந்தவல்லி - அருமறைக்கு, முன்னாய் - முடிவாய - முதல்விதன்னை, உன்னாது - ஒழியினும் - உன்னினும் - ஒன்றில்லையே.

Sunday, August 26, 2007

திரிபுரை பாதங்கள் சேர்மின்களே (பாடல் 54)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே



இல்லாமை சொல்லி - வறுமையைச் சொல்லிக் கொண்டு


ஒருவர் தம்பால் சென்று - முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு


இழிவுபட்டு - அவரால் அவமானப்படுத்தப்பட்டு


நில்லாமை நினைகுவிரேல் - நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால்


நித்தம் நீடு தவம் - எப்போதும் பெருமை மிக்க தவத்தை


கல்லாமை கற்ற கயவர் தம்பால் - செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம்


ஒரு காலத்தும் செல்லாமை வைத்த - எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத


திரிபுரை பாதங்கள் சேர்மின்களே - மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்.

***

முன்பின் தெரியாத அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளும் உறவினரோ அல்லாதவரோ அவர்களிடம் உதவி கேட்டு நிற்பது மிக்க அவமானம் அல்லவோ? அதனால் யாரோ ஒருவரிடம் என்று பொருள் படும் படி 'ஒருவர் தம்பால்' என்கிறார்.

பொருட்செல்வமும் வேண்டும் அருட்செல்வமும் வேண்டும் என்பது பொய்யாமொழி வாக்கு. அதனால் பொருள் வேண்டுவோரும் அன்னையைத் தொழவேண்டும்; அருள் வேண்டுவோரும் அவளைத் தொழவேண்டும் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.

ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.

***

அந்தாதித் தொடை: முந்தையப் பாடல் தவமில்லையே என்று நிறைந்தது. இந்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சேர்மின்களே என்று நிறைய அடுத்தப் பாடல் மின்னாயிரம் என்று தொடங்குகிறது.

எதுகை: இல்லாமை, நில்லாமை, கல்லாமை, செல்லாமை

மோனை: இல்லாமை - இழிவுபட்டு, நில்லாமை - நெஞ்சில் - நினைகுவிரேல் - நித்தம் - நீடுதவம், கல்லாமை - கற்ற - கயவர் - காலத்திலும், செல்லாமை - திரிபுரை - சேர்மின்களே.

Friday, August 10, 2007

தன்னந்தனி இருக்க வேண்டும்! (பாடல் 53)


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் - உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்


பென்னம்பெரிய முலையும் - உன் பெரிய முலைகளையும்

முத்தாரமும் - அந்த முலையின் மேல் இருக்கும் முத்து மாலையையும்

பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் - பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும்


கண் மூன்றும் - மூன்று கண்களையும்

கருத்தில் வைத்துத் - மனத்தில் நிறுத்தி

தன்னந்தனியிருப்பார்க்கு - மற்ற எந்த நினைவுகளும் இன்றித் தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்


இது போலும் தவமில்லையே - தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.


***

தாய்ப்பால் உண்ணும் குழந்தையின் கவனமெல்லாம் தாயின் முலை மீதே இருக்கும். அபிராமி அன்னையின் தவப்புதல்வனான அபிராமி பட்டரின் கவனமும் தாயின் பெரிய முலைகள் மீதே இருக்கிறது.

தன்னந்தனியாக மற்ற யாரும் இல்லாமல் இருப்பது தவமாகாது. பலவிதமான எண்ணக் கூட்டங்களுடன் இருக்கும் வரை தன்னந்தனியாக யாரும் இருப்பதில்லை. வேறு வித எண்ணங்கள் எதுவுமின்றி அன்னையின் திருவுருவம் ஒன்றே மனத்தில் நிற்கும் போது தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியமாகிறது; அப்படி இருப்பவர்களை விட தவத்தில் சிறந்தவர் வேறு எவரும் இல்லை.

'சின்னஞ்சிறு பெண் போலே' என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் எதிரொலி போல் எனக்குத் தோன்றுகிறது. 'சிற்றாடை இடை நிறுத்தி' என்னும் போதும் 'பிச்சிப்பூ சூடி நிற்பாள்' என்னும் போதும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சின்னங்களே என்று நிறைந்தது. இந்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் தவமில்லையே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்கும்.

எதுகை: சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய, கன்னங்கரிய, தன்னந்தனி.

மோனை: சின்னஞ்சிறிய - சாத்திய - செய்யபட்டும், பென்னம்பெரிய - முலையும் - முத்தாரமும் - பிச்சி, கன்னங்கரிய - குழலும் - கண் - கருத்தில், தன்னந்தனி - தவமில்லையே.

Sunday, July 29, 2007

பிறை முடித்த ஐயன் திருமனையாள்! (பாடல் 52)


வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி

துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்

மதகரி - பெரிய பெரிய யானைகள்

மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள்

சிவிகை - அழகிய பல்லக்கு

பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்


பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்

பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்


அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு

அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு - பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு


உளவாகிய சின்னங்களே - கிடைக்கும் அடையாளங்கள்.

இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வையகத்தே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வையம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சின்னங்களே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்கும்.

எதுகை: வையம், பெய்யும், ஐயன், செய்யும்

மோனை: வையம் - மதகரி - மாமகுடம், பெய்யும் - பெருவிலை - பிறைமுடித்த, ஐயன் - அடி - அன்பு, செய்யும் - தவம் - சின்னங்களே.

Friday, July 20, 2007

மரணம் பிறவி இரண்டும் எய்தார் (பாடல் 51)


அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே


அரணம் பொருள் என்று - தாங்கள் கட்டிய திரிபுரம் என்னும் தங்கம், வெள்ளி, இரும்பினால் ஆன கோட்டைகளை நிலையென்று நினைத்து

அருள் ஒன்றும் இலாத - யார் மேலும் கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த

அசுரர் தங்கள் - திரிபுர அசுரர்களின்

முரண் அன்று அழிய - பகை முன்னொரு நாள் அழிந்து போகும் படி

முனிந்த பெம்மானும் - சினம் கொண்டு சிரித்து எரி கொளுத்திய சிவபெருமானும்

முகுந்தனுமே - அவருக்குத் துணையாக அம்பாகி நின்ற முகுந்தனும்

சரணம் சரணம் என நின்ற நாயகி - சரணம் சரணம் என்று அடிபணிய நிற்கும் தலைவியான அம்மையே!

தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அவள் தம் அடியவர்கள் மரணமில்லா பெருவாழ்வை எய்துவார்கள். இந்த உலகில் மீண்டும் இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழலுக்குள் அகப்படமாட்டார்கள்.

***

அருஞ்சொற்பொருள்:

அரணம்: கோட்டை, மதில்
முரண்: முரண்பாடு, பகைமை
முனிதல்: சினம் கொள்ளுதல்

அந்தாதித் தொடை: சென்ற பாடல் அரண் நமக்கே என்று நிறைந்தது. இந்தப் பாடல் அரணம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வையகத்தே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் வையம் என்று தொடங்கும்.

எதுகை: அரணம், முரண், சரணம், மரணம்

மோனை: அரணம் - அருள் - அசுரர், முரண் - முனிந்த - முகுந்தனுமே, சரணம் - சரணம் - தன், இரண்டும் - இந்த.

Monday, April 30, 2007

நாயகி நான்முகி நாராயணி (பாடல் 50)



நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

நாயகி - உலகனைத்துக்கும் தலைவி

நான்முகி - நான்முகனான பிரம்மதேவரின் சக்தி

நாராயணி - நாராயணனின் சக்தி

கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்

சாம்பவி - சம்புவான சிவபெருமானின் சக்தி

சங்கரி - இன்பம் அருள்பவள்

சாமளை - பச்சை வண்ணமுடையவள்

சாதி நச்சு வாய் அகி - கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்

மாலினி - பலவிதமான மாலைகளை அணிந்தவள்

வாராகி - உலகங்கள் காக்கும் வராக ரூபிணி

சூலினி - திரிசூலம் ஏந்தியவள்

மாதங்கி - மதங்க முனிவரின் திருமகள்

என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.

அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

நளினம் - வடமொழியில் தாமரை
பஞ்ச - வடமொழியில் ஐந்து
சாயகம் - வடமொழியில் அம்பு
சம்பு, சங்கர - சம் = இன்பம்; பு = பிறப்பிடம்; கர = செய்பவன்; ஆக சம்பு, சங்கரன் என்னும் போது இன்பத்தின் பிறப்பிடம், இன்பத்தைத் தருபவன் என்று பொருள்; சாம்பவி, சங்கரி அவற்றிற்குப் பெண்பால். இவையும் வடசொற்களே.
சாமளை - ஷ்யாமளை என்னும் வடசொல் - பச்சைநிறத்தவள்
கியாதி - க்யாதி என்னும் வடசொல் - புகழ்.

அந்தாதித் தொடை: நாயகியே என்று சென்ற பாடல் நிறைவடைந்தது. நாயகி என்று இந்தப் பாடல் தொடங்கியது. அரண் நமக்கே என்று இந்தப் பாடல் நிறைகிறது. அரணம் என்று அடுத்தப் பாடல் துவங்கும்.

எதுகை: நாயகி, சாயகி, வாயகி, ஆயகியாதி

மோனை: நாயகி - நான்முகி - நாராயணி - நளின, சாயகி - சாம்பவி - சங்கரி - சாதி, வாயகி - வாராகி - மாதங்கி, ஆய - அரண்.

Saturday, April 28, 2007

இசை வடிவாய் நின்ற நாயகியே (பாடல் 49)




குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி - உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர்

வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது - வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது

வளைக்கை அமைத்து - வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து

அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து - அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து

அஞ்சல் என்பாய் - அஞ்சாதே என்று கூறுவாய்

நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே - நரம்பைக் கொண்டு இசை எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே.

***

உடலில்லாமல் உயிர் இல்லை; உயிரில்லாமல் உடல் இல்லை. உடலை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயங்குகிறது. அந்த உடலும் உயிரும் இணைந்திருக்க ஒரு கால அளவு விதிக்கப்படுகிறது. அந்தக் கால வரம்பு வரை காலன் வருவதில்லை. அந்தக் கால வரம்பு முடிந்தவுடன் காலன் வரும் நேரத்தில் உயிர் இந்த உடலை விட்டுச் செல்ல பயந்து மறுகுகிறது. அந்த நேரத்தில் ஒரு நல்ல இசை கேட்டால் உயிருக்கு அந்த மரண வேதனை குறையும். இசையே வடிவாய் நிற்கும் அபிராமி அன்னை அந்த நேரத்தில் அழகில் சிறந்த மகளிர் சூழ வந்து தன் திருக்கரங்களை அசைத்து அஞ்சாதே என்று சொன்னால்? அந்த மரண பயமும் மரண வேதனையும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுமில்லையா? அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் அபிராமி பட்டர்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் குரம்பையிலே என்று முடிந்தது. இந்தப்பாடல் குரம்பை அடுத்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாயகியே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் நாயகி என்று தொடங்கும். அடுத்த பாடல் பலருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான பாடல்.

எதுகை: முதல் இரண்டு சொற்களும் எதுகையாக அமைத்திருக்கிறார். குரம்பை அடுத்து - வரம்பை அடுத்து - அரம்பை அடுத்த - நரம்பை அடுத்து.

மோனை: குரம்பை - குடி - கூற்றுக்கு, வரம்பை - மறுகும் - வளைக்கை, அரம்பை - அடுத்த - அரிவையர் - அஞ்சல், நரம்பை - நின்ற - நாயகியே.

Tuesday, April 24, 2007

படரும் பரிமளப் பச்சைக்கொடி (பாடல் 48)



சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் - சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல்

ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் - ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை

பதித்து நெஞ்சில் - மனத்தில் நிலையாகக் கொண்டு

இடரும் தவிர்த்து - இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து

இமைப்போது இருப்பார் - இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார்

பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள்.

***

ஐயன் சிவந்தவன். உயர்ந்தவன். சடைமுடியை உடையவன். நிலவை அணிந்தவன். இவற்றை எல்லாம் பார்த்தவுடன் அபிராமிபட்டருக்கு கொடுமுடியில் நிலாப்பிறையைக் கொண்ட சிறு குன்று நினைவிற்கு வந்தது போலும். அந்தக் குன்றில் படர்ந்த மணம்வீசும் பச்சைக் கொடி போல் அம்மை இருக்கிறாள். பொருத்தமான உவமைகள்.

அழகிய காட்சிகளை மனத்தில் நிறுத்துவது எளிது. சிறு குன்றில் படர்ந்த பச்சைக் கொடி என்பது மிக அழகிய காட்சி தானே. அந்த அழகிய காட்சியை ஒரு நொடியேனும் மனச்சலனமின்றி மனத்தில் நிறுத்த வல்லார்கள் மீண்டும் பிறப்பிறப்பு என்ற சுழலில் அகப்பட மாட்டார்கள் என்பது பட்டரின் அறிவுரை. செவி சாய்ப்போம்.

***

அருஞ்சொற்பொருள்:

துன்றும் - தங்கும்
பரிமளம் - நறுமணம்
குடர் - குடல்
கொழு - இறைச்சி
குருதி - இரத்தம்
குரம்பை - உடல்

அந்தாதித் தொடை: சுடர்கின்றதே என்று நிறைந்தது சென்ற பாடல். சுடரும் என்று தொடங்கிற்று இந்தப் பாடல். குரம்பையிலே என்று முடிந்தது இந்தப் பாடல். குரம்பை அடுத்து என்று தொடங்கும் அடுத்தப் பாடல்.

எதுகை: சுடரும், படரும், இடரும், குடரும்

மோனை: சுடரும் - துன்றும் - சடைமுடி, படரும் - பரிமள - பச்சைகொடி - பதித்து, இடரும் - இமைப்போது - இருப்பார் - எய்துவரோ, குடரும் - கொழுவும் - குருதியும் - குரம்பையிலே.

Saturday, April 21, 2007

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)



வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே


வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே - என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன்

ஒருவர் வீழும் படி அன்று - அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை

விள்ளும் படி அன்று - அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை

வேலை நிலம் ஏழும் - கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும்

பருவரை எட்டும் - எட்டு உயர்ந்த மலைகளும்

எட்டாமல் - எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்)

இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.

***

நிலையான பேரின்ப வாழ்வை அடையும் வழியை அன்னையின் அருளால் கண்டு கொண்டவர் அந்தப் பேரொளி உலகங்களுக்கெல்லாம் எட்டாமல் சுடரிரண்டிலும் சுடர்கின்றது என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்கிறார்.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்ற முதுமொழியையும் அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆன்றோர் மொழியையும் சூரிய சந்திர மண்டலத்தில் வசிப்பவள் என்ற வேதமொழியையும் இந்தப் பாடலில் காணமுடிகின்றது.

***

அருஞ்சொற்பொருள்:

விள்ளுதல் - பிரித்துப் பிரித்து விளக்கமாகச் சொல்லுதல்

வேலை - கடல்

பரு வரை - பெரிய (பருத்த) மலை

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வாழ்த்துவனே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் சுடர்கின்றதே என்று நிறைந்தது. அடுத்தப் பாடல் சுடரும் என்று தொடங்கும்.

எதுகை: வாழும், வீழும், ஏழும், சூழும்

மோனை: வாழும் - ஒன்று - மனத்தே - ஒருவர், வீழும் - விள்ளும் - வேலை, ஏழும் - எட்டும் - எட்டாமல் - இரவு, சூழும் - சுடர்க்கு - சுடர்கின்றதே.

வாழும்படி - வீழும்படி, எட்டும் - எட்டாமல், இரவு பகல், போன்ற இடங்களில் முரண் தொடை அமைந்துள்ளது.

Friday, April 20, 2007

யானுன்னை வாழ்த்துவனே (பாடல் 46)



வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் - வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும்

தம் அடியாரை - தம் அடியவர்களை

மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே - பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே.

புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே - அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே - நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.

***

பொருள் விளக்கம் தேவையில்லை. மிக எளிமையான பாடல் இது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வெறுக்கை அன்றே என்று முடிந்தது. இந்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வாழ்த்துவனே என்று முடிகின்றது. அடுத்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கும்.

எதுகை: வெறுக்கும், பொறுக்கும், கறுக்கும், மறுக்கும்.

மோனை: வெறுக்கும் - மிக்கோர், பொறுக்கும் - புதியது - புது, கறுக்கும் - கலந்த, மறுக்கும் - வாழ்த்துவனே.

Monday, April 16, 2007

பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே (பாடல் 45)



தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

தொண்டு செய்யாது - உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல்

நின் பாதம் தொழாது - உன் திருவடிகளை வணங்காமல் (உன் திருவடிகளான அடியார்களை வணங்காமல்)

துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ - துணிவுடன் தங்கள் மனம் விரும்பியதையே பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ (அவர்கள் உன் அருளைப் பெற்று என்றும் நிலையான வாழ்வை அடைந்தார்களோ இல்லையோ)

அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ - அவர்கள் செய்ததை அடியேன் கண்டு அதனைப் போல் செய்தால் அது நல்லதோ கெட்டதோ

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அப்படியே நான் உன் மனம் விரும்பாததைச் செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள வேண்டும்.

***

பக்தி வழியில் நிற்காமல் ஞானவழியிலும் கர்மவழியிலும் நின்று கடமைகளைச் செய்த முன்னோர்கள் பலர் உண்டு; அவர்களை 'தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ' என்கிறார். இங்கே இச்சை என்றது அவளது இச்சைவழி வந்த கடமைகளை. கடமை புரிவார் இன்புறுவார்; அவற்றை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; இறைவியை வணங்கத் தேவையில்லை - என்று அந்த கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களோ இல்லையோ. அதனை நான் அறியேன் என்கிறார்.

உன் அடியவன் ஆன நான் அவர்களைக் கண்டு உன்னை விட என் கடமைகளே பெரியது என்று எண்ணிச் செயல்பட்டால் அது நல்லதோ கெட்டதோ; அதனைத் தவமாகக் கொள்வாயோ குற்றமாகக் கொள்வாயோ; அதனை அறியேன். ஆனால் எப்போதாவது அப்படி நான் செய்தால் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்; குற்றம் செய்தேன் என்று என்னைத் தள்ளிவிடாதே என்கிறார்.

***

அந்தாதித் தொடை: தொண்டு செய்தே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கிற்று. வெறுக்கை அன்றே என்று நிறைந்தது இந்தப் பாடல். அடுத்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கும்.

எதுகை: தொண்டு செய்யாது, பண்டு செய்தார், கண்டு செய்தால், மிண்டு செய்தாலும் என்று இரண்டிரண்டு எதுகைகள் அமைந்திருக்கின்றன.

மோனை: தொண்டு - செய்யாது - தொழாது - துணிந்து, பண்டு - பரிசு, கண்டு - கைதவம், மிண்டு - பொறுக்கை - பின் (பகரமும் மகரமும் மோனைகளாக அமையும்)

உளரோ இலரோ, கைதவமோ செய்தவமோ, நன்றே அன்றே - இந்த இடங்களில் முரண் தொடை அமைந்திருக்கிறது.

Saturday, April 14, 2007

எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் (பாடல் 44)



தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் - அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.

ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே - இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.

***

அன்னை ஆதிபராசக்தியே ஆதிப்பரம்பொருள்; அவளே மும்மூர்த்திகளையும் படைத்து அவர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்யும் வண்ணம் அவர் தம் சக்தியராய் தானே அமர்ந்தாள் என்பது சாக்த மரபு. அதனை இங்கே சொல்கிறார் பட்டர். ஒரே நேரத்தில் அன்னை சங்கரனாருக்கு மனைவியாகவும் அன்னையாகவும் இருக்கிறாள். அவள் எல்லா தெய்வங்களுக்கும் மேலை இறைவியும் ஆவாள்.
வேறு தெய்வங்கள் தரும் பயன்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு ஆதியான அன்னை அருள்வாள்; அவற்றிற்கு மேலாக முக்தியையும் அவள் அருள்வாள் என்பதால் வேறு தெய்வங்களைப் பணிய வேண்டிய தேவை இல்லை என்பதையும் கடைசி அடியினில் சொல்கிறார்.

***

அந்தாதித் தொடை:

இருந்தவளே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தவளே என்று தொடங்கியது. இந்தப் பாடல் தொண்டு செய்தே என்று நிறைவுறுகிறது. அடுத்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கும்.

எதுகை: தவளே, அவளே, இவளே, துவளேன் என்று அமைந்திருக்கிறது.

மோனை: தவளே - சங்கரனார் (தகரமும் சகரமும் மோனைகளாக அமையும்), அவளே - அவர் - அன்னை - ஆயினள் - ஆகையினால், இவளே - யாவர்க்கும் - இறைவியும் (இகரமும் யகரமும் மோனைகளாக அமையும்), துவளேன் - தெய்வம் - தொண்டு - செய்தே.

Saturday, April 07, 2007

இறைவர் செம்பாகத்து இருந்தவளே (பாடல் 43)



பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே; பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே

பஞ்சபாணி - ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை (பாணங்களை) ஏந்தியவளே

இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே

சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே

தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை - தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்

அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை - அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய

எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட

இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

***

இறைவர் செம்பாகத்து இருந்தவளே என்று இறந்த காலத்தில் கூறியது காலம் காலமாக அவள் இறைவரின் செம்பாகத்தில் இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக - மதுரையில் பிறந்த நாள் முதல் வாழ்ந்தவன் நான் என்று மதுரையில் தற்போதும் வாழ்கின்றவர் சொன்னால் அது அவர் என்றைக்கும் மதுரையில் வாழ்ந்தவர்; இப்போதும் வாழ்கின்றவர் என்ற பொருளை வழங்குவதைப் போல.

***

அருஞ்சொற்பொருள்:

பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு

அந்தாதித் தொடை: சென்ற பாடலை நிறைத்த பரிபுரையே என்ற சொல்லை ஒட்டி இந்தப் பாடல் பரிபுர என்று தொடங்கியது. இந்தப் பாடலை நிறைக்கும் இருந்தவளே என்ற சொல்லை ஒட்டி தவளே என்று தொடங்கும் அடுத்தப் பாடல்.

எதுகை: பரிபுர, திரிபுர, புரிபுர, எரிபுரை என்று இந்தப் பாடலிலும் இரண்டிரண்டு எதுகைகளாக இருக்கின்றன.

மோனை: பரிபுர - பாசாங்குசை - பஞ்ச - பாணி, திரிபுர - சிந்துர - தீமை (சகரமும் தகரமும் மோனைகளாக அமையும்), புரிபுர - பொருப்பு, எரிபுரை - இறைவர் - இருந்தவளே (எகரமும் இகரமும் மோனைகளாக அமையும்)

சுந்தரி சிந்துர என்ற இடத்திலும் வஞ்சரை அஞ்ச என்ற இடத்திலும் ஒரே ஓசைகள் வரும்படி அழகுடன் அமைந்திருக்கிறது.

Friday, April 06, 2007

பனி மொழி வேதப் பரிபுரையே (பாடல் 42)



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே


இடங்கொண்டு விம்மி - தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி

இணை கொண்டு - ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து

இறுகி இளகி - இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும்

முத்து வடங்கொண்ட - முத்து மாலையை அணிந்தும் இருக்கும்

கொங்கை மலை கொண்டு - மலைகள் என்னும் படியான கொங்கைகளைக் கொண்டு

இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட - நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்த

கொள்கை நலம் கொண்ட நாயகி - பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே

நல் அரவின் படம் கொண்ட அல்குல் - நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட

பனி மொழி வேதப் பரிபுரையே - குளிர்ந்த பேச்சினையுடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே.

**

அந்தாதித் தொடை: இடவே என்று சென்ற பாடல் நிறைந்தது; இந்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கியது. இந்தப் பாடல் பரிபுரையே என முடிகிறது; அடுத்தப் பாடல் பரிபுரச் சீறடி என்று தொடங்குகிறது.

எதுகை: இடம் கொண்டு, வடம் கொண்ட, நடம் கொண்ட, வடம் கொண்ட என்று இரண்டிரண்டு எதுகைகளாக அமைத்திருக்கிறார்.

மோனை: இடம் - இணை - இறுகி - இளகி, வடம் - வலிய, ந்டம் - நலம் - நாயகி - நல், படம் - பனி - பரிபுரை.

மற்றைய அணிகள்:
கொண்டு/கொண்ட என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
வலிய நெஞ்சைப் பொருதுவதற்கு மலை தானே வேண்டும். அதனையும் சொல்கிறார்.
இறுகி இளகி என்று முரண் தொடையைக் காட்டுகிறார்.
அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு.

Friday, March 30, 2007

புண்ணியம் செய்தனமே மனமே (பாடல் 41)



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.

புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி - இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் அன்னையும் சிவந்த அவளது கணவரும் இணைந்து

நம் காரணத்தால் நண்ணி - நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி

இங்கே வந்து - நாமிருக்கும் இடமான இங்கே வந்து

தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி - தம் அடியவர்களின் கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி அருள் செய்து

நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - நம் தலையின் மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை நிலையாக நிறுத்திடவே.

***

அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. இதனை புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி என்று சொல்கிறார்.

அம்மையின் அடியவர் என்பதால் அம்மையை முன்னிலைப் படுத்தி அவளின் கணவர் என்று பெருமானைச் சொல்கிறார். என்னை அறிந்தவர்கள் என் தந்தையைக் குமரனின் தந்தை என்பதும் என் தந்தையை அறிந்தவர்கள் என்னை நடராஜன் மகன் என்பதும் போல.

தாமே நமக்காக விரும்பி வந்தார்கள் என்பது நாம் செய்த ஏதோ ஒரு நல்வினைக்காக என்று இல்லாது அவர்களின் கருணையாலே நமக்கு அருள் செய்ய விரும்பி வந்தார்கள் என்று காட்டுவதற்காக.

இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக.

அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள்.

இதெல்லாம் அவள் திருவடிகளின் பெருமை. அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார்.

***

அந்தாதித் தொடை: முன் செய் புண்ணியமே என்று சென்ற பாடல் முடிந்தது. இந்தப் பாடல் புண்ணியம் செய்தனமே மனமே என்று தொடங்கி புண்ணியம் என்ற சொல்லைக் கொண்டு அந்தாதித் தொடையைத் தொடுக்கிறார். பதித்திடவே என்று இந்தப் பாடல் நிறைந்து அடுத்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கி 'இடம்' என்ற சொல்லைக் கொண்டு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அணி நலம்:

புண்ணியம், கண்ணியும், நண்ணி, பண்ணி என்று நான்கு அடிகளிலும் எதுகையை அமைத்திருக்கிறார்.

புண்ணியம் - புது - பூங்குவளை, கண்ணி - கணவர் - காரணம், நண்ணி - நடு, பண்ணி - பத்ம - பாதம் - பதித்திடவே என்று நான்கு அடிகளிலும் மோனைச் சுவையைக் காட்டுகிறார்.

செய்தனமே மனமே என்ற இடத்தில் ஒன்று போல் ஒலிக்கும் சுவைநலத்தையும் காட்டுகிறார்.

Thursday, March 22, 2007

முன் செய் புண்ணியமே (பாடல் 40)




வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே

வாணுதற் கண்ணியை - ஒளி பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை,

விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை - விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை,

பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை - ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை

காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய்
புண்ணியமே - காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.

அருஞ்சொற்பொருள்:

அண்ணியள் - அண்மையில் இருப்பவள்; எளிதானவள்

Saturday, March 17, 2007

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு (பாடல் 39)




ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு

அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு - எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று - இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை

முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே - முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!


(கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே - இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்)

அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே - முன்பு முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!
)

Tuesday, March 13, 2007

அவளைப் பணிமின் கண்டீர் (பாடல் 38)




பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் - பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்

பனி முறுவல் தவளத் திருநகையும் - குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்

துணையா - துணையாகக் கொண்டு

எங்கள் சங்கரனைத் - எங்கள் (தலைவனாம்) சங்கரனைத்

துவளப் பொருது - துவண்டு போகும்படி போரிட்டு

துடியிடை சாய்க்கும் - உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்

துணை முலையாள் - ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அவளைப் பணியுங்கள் தேவருலகாம் அமராவதியை ஆளுவதற்கு.

Saturday, March 03, 2007

திரு உடையானிடம் சேர்பவளே (பாடல் 37)



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே


கைக்கே அணிவது கன்னலும் பூவும் - கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும்

கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை - தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள்

விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் - நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும்

எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே - எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே.

Thursday, March 01, 2007

பொருளே பொருள் முடிக்கும் போகமே (பாடல் 36)




பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

பொருளே - பொருட்செல்வமாகித் திகழ்பவளே!

பொருள் முடிக்கும் போகமே - அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே!

அரும் போகம் செய்யும் மருளே - அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே!

மருளில் வரும் தெருளே - அப்படி மயக்கம் வந்த பின் அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே!

என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது - என் மனதில் என்னை வஞ்சிக்கும் மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது. அதன் பெருமையை நான் எப்படி சொல்வது?

அறிகின்றிலேன் - சொல்லும் வழி அறியேன்.

அம்புயாதனத்து அம்பிகையே - தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையே

***

பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம். அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயம் 'அர்ச்சுன விஷாத யோகம் - அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்'. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் - அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது. அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமை? மனத்தில் வஞ்சத்து இருள் கொண்டு இருந்த என்னிடம் அந்த இருள் நீங்கி ஒளி வெள்ளமாய்த் திகழும் படி செய்த அன்னையின் அருளையும் அந்த அருளின் பெருமையையும் சொல்லி முடியுமா?

Sunday, February 25, 2007

தரங்கக் கடலுள் துயில் கூரும் விழுப்பொருளே (பாடல் 35)



திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? - திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?

எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? - எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?

தரங்கக் கடலுள் - அலைவீசும் கடலில்

வெங்கட் பணி அணை மேல் - வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல்

துயில் கூரும் விழுப்பொருளே - துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !

(பெருமாளும் அன்னையின் உருவம் என்று பட்டர் இந்தப் பாடலில் சொல்கிறார்)

படத்தில் இருக்கும் அன்னை சங்கு, சக்கரம், கதை ஏந்தி கருடனின் மேல் அமர்ந்திருக்கும் வைஷ்ணவி தேவி.

Saturday, February 24, 2007

ஞாயிறும் திங்களுமே (பாடல் 34)


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு - தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து

தான் போய் இருக்கும் - (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்):

சதுர்முகமும் - வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).

பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் - நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக)

பாகமும் - சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்

பொற் செந்தேன் மலரும் - பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும்

அலர் கதிர் ஞாயிறும் - அன்றாடம் சுடர் வீசித் திகழும் கதிரவனும்

திங்களுமே - நிலவுமே.

Friday, February 23, 2007

உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே (பாடல் 33)




இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே - அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!

உன்னையே அன்னையே என்பன் - உன்னையே என் அன்னை என்பேன்.

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது - நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது

உழைக்கும் போது - அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது

ஓடி வந்தே (வந்து) அஞ்சல் என்பாய் - என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் பட்டரும் பட்டர் பிரானைப் போல.

Saturday, February 17, 2007

ஈசர் பாகத்து நேரிழையே (பாடல் 32)



ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

ஆசைக்கடலில் அகப்பட்டு - ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு

அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை - கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை

நின் பாதம் என்னும் வாசக் கமலம் - உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை

தலை மேல் வலிய வைத்து - என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட நேசத்தை - என்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை

என் சொல்லுகேன் - எப்படி புகழ்வேன்?

ஈசர் பாகத்து நேரிழையே - சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே!

மிக எளிமையான பாடல்.

Thursday, February 15, 2007

ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை (பாடல் 31)




உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து - உமையன்னையும் சிவபெருமானும் ஒரே உருவாக வந்து

இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் - இங்கே இந்த உலகிலேயே மிக கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள்

இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை - இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய சமயங்களும் இல்லை (இறை அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில் செல்வதா, யோகவழியில் செல்வதா, கருமவழியில் செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை)

ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - (பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அழகிய தோள் உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் தானாகவே அமைதியுற்றது.

***

அம்மையும் அப்பனுமாக ஒரே உருவமாக வந்து அவர்கள் அருளால் அவர்கள் தாளை வணங்க வைத்துவிட்டதால் இனி எந்த வழியில் செல்ல வேண்டும் என்று நான் எண்ணிக் குழம்ப வேண்டாம்; அவர்களே அவர்களின் கருணையால் வழியைக் காட்டிவிட்டார்கள்; பிறப்பிறப்புப் பிணியும் தீர்ந்தது; பெண்களின் மேல் வைத்த ஆசையும் (பெண்களுக்கு ஆண்கள் மேல் வைத்த ஆசை) தானாக அமைதியுற்றது; அதனால் புதிதாகவும் எந்த பந்த பாசமும் தோன்றாது.

Saturday, February 10, 2007

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே (பாடல் 30)



அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே


அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் - நான் ஒன்றும் அறியா சிறு குழந்தையாக இருக்கும் போதே நான் புண்ணிய பாவங்களைச் செய்து சுழலில் சிக்கிக் கொள்ளாமல் என்னைத் தடுத்து என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய்.

கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? - அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ?

இனி நான் என் செயினும் - இனிமேல் நான் என் செய்தாலும்

நடுக்கடலுள் சென்றே விழினும் - அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும்

கரையேற்றுகை நின் திருவுளமோ - என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் தானே?!

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!

***

உன் உடைமையான நான் புலன் வழியே சென்று முட்டாள்த்தனமாக என்ன செய்தாலும், நடுக்கடலில் சென்று விழுந்தாலும் என்னைக் காக்க வேண்டியது உடையவளான உன் பொறுப்பு என்கிறார் பட்டர்.

Sunday, February 04, 2007

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே (பாடல் 29)



சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே


சித்தியும் - எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்

சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும் - அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்

சக்தி தழைக்கும் சிவமும் - பராசக்தியாகிய உன்னிலிருந்து தழைக்கும் சிவமும்

தவம் முயல்வார் முத்தியும் - தவம் புரிபவர்களுக்கு இந்த பிறப்பிறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலையும்

முத்திக்கு வித்தும் - அந்த விடுதலைக்கு காரணமும்

வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் - விடுதலைக்குக் காரணமாக மனத்தில் தோன்றிய நினைவும்

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே - அந்த மனத்தின் உள்ளே நின்று எல்லா எண்ணங்களையும் தோற்றுவித்துக் காக்கும் திரிபுரசுந்தரி தானே.

Saturday, February 03, 2007

தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே (பாடல் 28)


சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

சொல்லும் பொருளும் என - ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இயைந்து இணைந்து கூடி இருக்கிறதோ அது போல்

நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே - ஆனந்த நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் இணைந்து ஓருடலாய் நிற்கும், மணம் வீசும் அழகிய பூங்கொடி போன்றவளே!

நின் புதுமலர்த்தாள் - அன்றலர்ந்த தாமரை போன்ற உனது இரு திருவடிகளை

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே - இரவும் பகலும் எப்போதும் தொழும் அடியார்களான அவர்களுக்கே

அழியா அரசும் - என்றும் அழியாத அரச போகமும்

செல்லும் தவநெறியும் - உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும் வழியான தவநெறியும்

சிவலோகமும் சித்திக்குமே - அந்தத் தவத்தின் பயனான சிவலோக முக்தியும் கிடைக்கும்.

Sunday, January 28, 2007

சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே (பாடல் 27)




உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே

உடைத்தனை வஞ்சப்பிறவியை - என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.

உள்ளம் உருகும் அன்பு படைத்தனை - உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய்.

பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை - தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய்.

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை - என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய்.

சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே - அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே (பாடல் 26)



ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் - உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே - மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!

மணம் நாறும் நின் தாளிணைக்கு - தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு

என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே - என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை.

முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.

Wednesday, January 10, 2007

இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! (பாடல் 25)



பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் - உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

முதல் மூவருக்கும் அன்னே - முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே!

உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி அன்னை என நிற்கும் உலகத் துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே
என்னே - என்னே உன் பெருமைகள்.

இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

மணியே! மணியின் ஒளியே! (பாடல் 24)



மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

மணியே - மாணிக்க மணியே!

மணியின் ஒளியே - மாணிக்க மணியின் ஒளியே!

ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!

அணியும் அணிக்கு அழகே - அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!

அணுகாதவர்க்குப் பிணியே - நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

பிணிக்கு மருந்தே - உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

***

உலக இன்பம் வேண்டி அல்லவா இறையை அன்றி மற்றவற்றையும் மற்றவர்களையும் பணிவது? உன்னைப் பணிந்த பின் மற்றவரைப் பணியேன் என்றது உலக இன்பங்கள் உன்னைப் பணிந்தததால் தானே கிடைக்கும்; அதனால் இறையைத் தவிர மற்றவரைப் பணியும் தேவை இல்லை என்பதைச் சொல்லியது.