Wednesday, January 30, 2008

மூவரும் போற்றும் தேவி (பாடல் 74)


எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளைப் பெற்றவர்கள் வேறு ஒன்று பெற தனி முயற்சி செய்யவும் வேண்டுமா? மரத்தின் வளர்ச்சிக்கு நீர் வார்க்க நினைப்பவர்கள் மரத்தின் ஒவ்வொரு இலையிலும் பூவிலும் காயிலும் கனியிலும் காம்பிலும் நீரைத் தெளிக்காமல் மரத்தின் வேரில் தானே நீரை வார்ப்பார்கள். வேரில் இட்ட நீர் மரத்தின் எல்லா பகுதிக்கும் சென்று மரத்தைத் தழைக்க வைக்குமே. அப்படி எது வேண்டும் என்று நினைத்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளை வேண்டினால் நினைப்பவை எல்லாம் கிடைக்குமே. ஆனால் அதில் ஒரு பிரச்சனை உண்டு. எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை வேண்டி அதனைப் பற்றியதும் மற்ற எதுவுமே தனக்குப் பொருளில்லை என்ற நிலையை அல்லவா ஒருவர் அடைந்துவிடுகிறார்?! அந்த நிலையைத் தான் இங்கே அபிராமிபட்டர் பாடியிருக்கிறார்.

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?

நயனங்கள் மூன்றுடை நாதனும் - முக்கண் முதல்வனும்

வேதமும் - வேதங்களும்

நாரணனும் - எங்கும் நிறை நாராயணனும்

அயனும் - எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனும்

பரவும் - போற்றும்

அபிராமவல்லி அடி இணையைப் - அபிராமவல்லியின் திருவடி இணைகளைப்


பயன் என்று கொண்டவர் - பெரும் பயன் என்று பற்றிக் கொண்டவர்கள்

பாவையர் ஆடவும் பாடவும் - தேவப் பெண்கள் பாடி ஆடி மகிழ்விக்க

பொன் சயனம் பொருந்தும் - பொன்னால் ஆன படுக்கையை உடைய

தமனியக் காவினில் தங்குவரே? - பாரிஜாதக் காட்டினில் தங்கி மகிழும் பயனை வேண்டுவாரோ?


மும்மூர்த்திகளே வணங்கும் திருவடிகளைப் பயன் என்று கொண்ட பின்னர் இந்திர போகமும் வேண்டாம் என்கிறார். அச்சுவை பெறினும் வேண்டேன் என்று மற்றொரு அருளாளர் சொன்னதைப் போல்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நயனங்களே என்று நிறைய இந்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தங்குவரே என்று நிறைய அடுத்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நயனங்கள், அயனும், பயன், சயனம்

மோனை: நயனங்கள் - நாதனும் - நாரணனும், அயனும் - அபிராமவல்லி - அடியிணையை, பயன் - பாவை - பாடவும் - பொன், சயனம் - தமனிய - தங்குவரே.

Sunday, January 27, 2008

அம்மை நாமம் திரிபுரை (பாடல் 73)


கடம்ப மாலை முருகப் பெருமானுக்கும் கடம்பவனம் அம்மைக்கும் என்று கேட்டிருக்கிறோம். அம்மை கடம்பமாலையும் அணிந்தவள் என்கிறாள் பட்டர் இந்தப் பாடலில்.

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே


தாமம் கடம்பு - நீ அணியும் மாலை கடம்ப மாலை


படை பஞ்சபாணம் - நீ ஏந்திய படை ஐந்து மலர்க்கணைகள்

தனுக் கரும்பு - வில்லோ கரும்பு வில்

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது - உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு

எமக்கு என்று வைத்த சேமம் திருவடி - எமக்கு என்று நீ வைத்திருக்கும் பாதுகாப்பு / செல்வம் உன் திருவடிகள்

செங்கைகள் நான்கு - செம்மையுடைய திருக்கைகள் நான்கு

ஒளி செம்மை - உன் திருமேனி ஒளி செம்மை

அம்மை நாமம் திரிபுரை - அம்மையே உன் திருநாமம் திரிபுரசுந்தரி

ஒன்றோடு இரண்டு நயனங்களே - திருக்கண்களோ நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள்.

***


அந்தாதித் தொடை: சென்ற பாடல் தாமரையே என்று நிறைய இந்தப் பாடல் தாமம் கடம்பு என்று தொடங்கியது. இந்தப் பாடல் நயனங்களே என்று நிறைய அடுத்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தாமம், யாமம், சேமம், நாமம்

மோனை: தாமம் - தனுக்கரும்பு, யாமம் - ஏத்தும் - எமக்கு - என்று, சேமம் - செங்கைகள் - செம்மை, நாமம் - நயனங்களே.

Thursday, January 10, 2008

எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே (பாடல் 72)


என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் - என் குறை தீர இங்கே நின்று உன்னைப் போற்றிப் பரவுகின்றேன்

இனி யான் பிறக்கின் - இனியும் எனக்கு ஒரு பிறவி வந்தால்

நின் குறையே அன்றி யார் குறை காண் - அது உன் குற்றமே அல்லாமல் வேறொருவர் குற்றமில்லை

இரு நீள் விசும்பின் - நீண்டு பரந்த வானத்தில் தோன்றும்

மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள் - மின்னலைக் காட்டிலும் மெல்லிய சிறந்த இடையினை உடையவளே

தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே - தனது குறைகள் எல்லாம் தீரும் படி எங்கள் சங்கரனார் தன் சடை மேல் வைத்து மகிழும் தாமரைப் பாதங்களையே

தாமரைப் பாதங்களையே ஏத்தி வணங்குகிறேன் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் என் குறையே என்று நிறைய இந்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கியது. இந்தப் பாடல் தாமரையே என்று நிறைய அடுத்தப் பாடல் தாமம் கடம்பு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: என் குறை, நின் குறை, மின் குறை, தன் குறை

மோனை: என் குறை - ஏத்துகிறேன் - இனி - யான், நின் குறை - நீள்விசும்பின், மின்குறை - மெலிகின்ற - மெல்லியலாய், தன்குறை - தாமரையே