Friday, December 30, 2005

96: சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் (பாடல் 14)

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்

சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் - உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே

பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே - ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.

எங்கள் தலைவியே. உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும். உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே. உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே. ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.

Thursday, December 29, 2005

93: கறை கண்டனுக்கு மூத்தவளே (பாடல் 13)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பூத்தவளே புவனம் பதினான்கையும் - பதினான்கு உலகங்களையும் பெற்றவளே

பூத்தவண்ணம் காத்தவளே - எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே

பின் கரந்தவளே - பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே - பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே

மாத்தவளே - மாபெரும் தவம் உடையவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே - உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

பதினான்கு உலகங்களையும் பெற்றவளே. எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே. பின் அவற்றை உன்னுள் மறைத்துக்கொள்பவளே. கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே.என்றைக்கும் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே. மாபெரும் தவம் உடையவளே. உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

Wednesday, December 28, 2005

91: நான் முன் செய்த புண்ணியம் ஏது? (பாடல் 12)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

கண்ணியது உன் புகழ் - நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்

கற்பது உன் நாமம் - நான் எப்போதும் கற்பது உன் நாமம்

கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் - என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் - அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)

பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து - நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன்.

நான் முன் செய்த புண்ணியம் ஏது - இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்?

என் அம்மே - என் தாயே

புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகையும் பெற்றவளே.

ஏழு உலகையும் பெற்ற என் தாயே. அபிராமி அன்னையே. எப்போதும் என் பாடல்களின் பொருளாய் இருப்பது உனது புகழே. எப்போதும் நான் சொல்லுவதும் உனது நாமமே. என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில். நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் அதற்கு என்ன புண்ணியம் செய்தேன்?

89: ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ (பாடல் 11)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

ஆனந்தமாய் - எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்

என் அறிவாய் - உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய்

நிறைந்த அமுதமுமாய் - அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவுடையாள் - மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.

மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் - வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்

தவள நிறக் கானம் - சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத்

தம் ஆடரங்காம் - தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட

எம்பிரான் முடிக் கண்ணியதே - என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

அபிராமி அன்னையே! நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள். மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள். அவை சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட சுடுகாட்டைத் தன் திருநடனத்திற்கு உரிய அரங்கமாய்க் கொண்ட என் தலைவனாம் ஈசன் தன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

Saturday, December 24, 2005

86: எங்கும் என்றும் நினைப்பது உன்னை (பாடல் 10)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் - நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே

எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே - யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே

அருளே உமையே - அருள் வடிவான உமையே

இமயத்து அன்றும் பிறந்தவளே - இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே

அழியா முத்தி ஆனந்தமே - என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே

அருள் வடிவான உமையே. இமயமலைக்கரசன் மகளே. எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே. நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே. நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே.

Friday, December 09, 2005

78: அம்மே வந்து என் முன் நிற்கவே (அபிராமி அந்தாதி பாடல் 9)

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன.

வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன.

பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன.

பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும்

ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்

செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும்

முருத்தன மூரலும் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு

நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும்.

அபிராமி அன்னையே. கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும், பால் வேண்டி அழுத திருஞான சம்பந்தருக்கு நல்கி நின்றனவும் ஆன உன் கருணையைப் போல் கனமான உன் திருமுலைகளுடனும் அதில் பொருந்தி இருக்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.