Tuesday, December 18, 2007

தனம் தரும் கல்வி தரும் (பாடல் 69)


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


தனம் தரும் - எல்லாவிதமான செல்வங்களும் தரும்


கல்வி தரும் - எல்லாவிதமான கல்வியையும் தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் - என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்


தெய்வ வடிவும் தரும் - தெய்வீகமான உருவத்தையும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்


நல்லன எல்லாம் தரும் - இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்

அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் - எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

மிகவும் பிரபலமான பாடல் இது. அபிராமி அந்தாதி பாடல் என்று தெரியாமலேயே பலருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும். அருமையான பாடலும் கூட.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தனமில்லையே என்று நிறைய இந்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கடைக்கண்களே என்று நிறைய அடுத்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தனம், மனம், இனம், கனம்

மோனை: தனம் - தரும் - தளர்வு, மனம் - வடிவும் - வஞ்சம், இனம் - என்பவர்க்கே, கனம் - கடைக்கண்களே.

21 comments:

said...

//மிகவும் பிரபலமான பாடல் இது. அபிராமி அந்தாதி பாடல் என்று தெரியாமலேயே பலருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும்.//

ஆமாம் குமரன்.

"கடைக்கண்ணால் இவனைப் பாரம்மா" அப்படின்னு ஒரு பாடல் பாபநாசம் சிவன் எழுதியது ஞாபகம் வருகிறது, காரணம் வேற ஒண்ணும் இல்ல இசையின்பம் பதிவிலிருந்து வந்தேன்... :-)

said...

வெகுநாளாய் அடியேன் எதிர்பார்த்துக் கிடந்த பாடல்!
ஒலிச் சுட்டி கொடுங்களேன், குமரன்.

இதில் இன்னொரு தத்துவ முத்தும் ஒளிந்துள்ளது.
தனம், கல்வி, வடிவம், இனம்-ன்னு உலக வாழ்வுக்கு வேண்டிய எல்லாம் சொல்லிவிட்டு இறுதியில்...
அன்பர் என்பவர்க்"கே" கனம் தரும் என்கிறார் பாருங்கள்!

எதற்கு இங்கு மட்டும் ஏகாரம்?
அன்பை சதா சர்வ காலமும் வைக்காத பக்தர்களுக்கு மற்றதை எல்லாம் தருபவள், பெருமையை (கனத்தை) மட்டும் தரமாட்டாளா என்ன?

இங்கு கனம் என்பது பெருமை என்னும் பொருளில் மட்டும் வரவில்லை!
கனமான பொருள் பறக்காது.
ஒரு பொருளின் மீது கனத்தை வைத்தால் அந்தப் பொருளும் பறக்காது!

அன்பர் ஆகி விட்டவர்களுக்கு இந்தக் கனத்தையும் தருகிறாள் அன்னை! பறக்காத மனத்தை, சிந்தையை அருளுகிறாள்!
அன்புடைய அடியார்களுக்கே உரிய குணமான நிலைபெற்ற மனத்தையும் இங்கே குறிக்கிறார் அபிராமி பட்டர்!

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்
என்ற அடியார் இலக்கணத்தின் படி, அன்பர் என்பவர்க்கே கனம் தருகிறாள் அன்னை!

said...

அன்புக் குமரா!
சரியாகச் சொன்னீர், அபிராமி அந்தாதி என்று தெரியாமலே மனம் பற்றிய
பனுவல்.
ரவிசங்கரின் விளக்கமும் மிக அர்த்த பூர்வமானது...

said...

நீங்க சொன்னதால 'கடைக்கண்ணால் இவனைப் பாரம்மா' பாட்டைத் தேடிக் கேட்டுப் பாக்குறேன் மௌலி. :-)

said...

//அன்பர் ஆகி விட்டவர்களுக்கு இந்தக் கனத்தையும் தருகிறாள் அன்னை! பறக்காத மனத்தை, சிந்தையை அருளுகிறாள்!
அன்புடைய அடியார்களுக்கே உரிய குணமான நிலைபெற்ற மனத்தையும் இங்கே குறிக்கிறார் அபிராமி பட்டர்!//

நீங்க சொன்ன பிறகே உணர்ந்தேன். எப்படி, எப்படிய்யா கே.ஆர்.எஸ்?...
கலக்கிட்டீங்க....

said...

ஒலிச்சுட்டி எங்கு கிடைக்கும் இரவிசங்கர்?

கனம் என்பதற்கு அருமையான விளக்கம் இரவிசங்கர். நீங்கள் சொன்னதற்குப் பின் கவனித்ததில் இன்னொன்றும் கண்ணுக்குத் தட்டுப்பட்டது. 'நாராயணனே நமக்கே' என்று கோதை சொல்வதைப் போல் இங்கே பட்டரும் 'அன்பர் என்பவர்கே அபிராமி கடைக்கண்களே' என்று இருமுறை ஏகாரத்தை இட்டிருக்கிறார். அங்கே சொல்லும் பொருளை இங்கேயும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. சரியா?

said...

ஆமாம் யோகன் ஐயா. மிக அருமையான பாடல் இது.

said...

குமரன்

ஒலிச்சுட்டி இதோ! நம் கேபி சுந்தராம்பாள் பாடுவது! (முதல் பகுதி மட்டும்)
http://www.musicindiaonline.com/p/x/qUQ2QK2Zqd.As1NMvHdW/

//இன்னொன்றும் கண்ணுக்குத் தட்டுப்பட்டது. 'நாராயணனே நமக்கே' என்று கோதை சொல்வதைப் போல் இங்கே பட்டரும் 'அன்பர் என்பவர்கே அபிராமி கடைக்கண்களே' என்று இருமுறை ஏகாரத்தை//

ஆமாம் குமரன்...ஏகார விளிப்பு கிட்டத்தட்ட அதே பொருளில் தான்!
அடியேன் புரிதல் என்னன்னா:

மற்ற செல்வம் எல்லாம் எல்லாருக்கும் தந்து விடுகிறாள் அபிராமி அன்னை!

பொதுவா உலகில் கண்கள் பேசும் பேச்சால் தான் மனம் கலைகிறது!

காதலியின் கண்களில் காதல்
அன்னையின் கண்களில் கண்ணீர்
தந்தையின் கண்களில் கோபம்
குழந்தையின் கண்ணில் அன்பு
நட்பின் கண்ணில் பாசம்
அல்லோர் கண்ணில் வெறி
நல்லோர் கண்ணில் கருணை

இப்படி கண்களால் கலைந்து போகும் மனத்துக்கு, கண்களாலேயே மருந்திடுகிறாள் அன்னை அபிராமி!
அதான் ஏகாரம் - கடைக் கண்க"ளே"!
மனம் பறந்து போகாமல் அதுக்கு கனம் தரும், கடைக் கண்களே!

இது எல்லாருக்கும் கிட்டி விடுமா-ன்னா..கிட்டும்...அதைப் பெற்றுக் கொள்ளச் சரியான பாத்திரம் வைத்திருந்தால்! அது தான் அன்பர் என்பவர்க்"கே"!

நாராயணனே நமக்கே - என்பவர்க்கே! கடைக்கண்களே!
இது பற்றி ரொம்ப நாள் சிந்தனை, அடியேனுக்கு! அதான் வெகு நாள் காத்துக் கிடந்த பதிவுன்னு சொன்னேன்!
ஒரு தனிப் பதிவா போடட்டுமா, இந்த இரண்டின் ஒப்புமையும்?

said...

அங்கே ஏகாரம் இதற்காக, அன்பர் என்பவர்க்கே, நீங்கள் உண்மையான அன்பர் இல்லாவிட்டால் கூட, நாடகத்தால் உன்னடியார் நடுவே புகுந்து ... என்று மணிவாசகர் கூறியது போல் அன்பர் என்று நினைப்பவர்களுக்கு கூட அருள் கொடுப்பவள் அன்னை அபிராமி என்று அன்னையின் அருள் திறத்தை பாடுகின்றார் அபிராமி பட்டர்.

said...

ஒலிச்சுட்டிக்கு நன்றி இரவிசங்கர்.

அபிராமியே என்று சொல்லாமல் கடைக்கண்களே என்று ஏன் சொன்னார் என்பதற்கு நன்கு விளக்கம் தந்தீர்கள். நாராயணனே நமக்கே vs அடியார் என்பவர்க்கே அபிராமி கடைக்கண்களே - ஒப்பீட்டுப் பதிவை எழுதுங்கள் இரவிசங்கர்.

said...

அழகாகச் சொன்னீர்கள் கைலாஷி. அன்பர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களுக்கும் அன்னையின் கடைக்கண்கள் இவற்றை நல்கும் என்பதைத் தான் அன்பர் 'என்பவர்க்கே' என்று சொன்னார் பட்டர் என்று அழகான விளக்கம் சொன்னீர்கள். மிக்க நன்றி.

said...

//இது எல்லாருக்கும் கிட்டி விடுமா-ன்னா..கிட்டும்...அதைப் பெற்றுக் கொள்ளச் சரியான பாத்திரம் வைத்திருந்தால்! அது தான் அன்பர் என்பவர்க்"கே"!//

அருமையான விளக்கங்கள்! ஒரு எழுத்தில், ஒரு சொல்லில், எத்தனை அர்த்தங்கள்!

said...

இன்னொரு நல்ல இரசிகரைக் கண்டுள்ளீர்கள் கவிநயா அக்கா. இரவிசங்கருடைய பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா? அவற்றைப் படிக்கத் தொடங்கிவிட்டால் அடியேன் இலுப்பை என்பது தெரிந்துவிடும். :-)

said...

intha paadalai paraayanam seithaal sagala sowbagiyangalaiyum adaiyalaam

said...

நன்றி திரு.கன்பூசியஸ்.

said...

TRSன் குரலில்...

http://open.spotify.com/track/2NQATb6IkI5YKmVyVCGSdK

ஸ்பாடிஃபை இல்லாதார் கோபித்துக் கொள்ள வேண்டாம். :-)

said...

இன்று TRS மறைந்த சேதி கேட்டு கலங்கி அவருடைய பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் கேட்டு இணையத்தில் தேடி இந்தத் தளத்தைப் பிடித்து, லிங்க் போடலாம் என்று பார்த்தால்... மேலே இருக்கு என்னோட லிங்க்...

வாழ்க உம் நற்பணி!

said...

பாடிய பின் மிக்க அமைதி கண்டேன். திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் சிறுவயது முதல் கேட்டாலும் இன்று முழு பாடல் கற்றேன். நன்றி.

said...

இறைவன் அடி தொழுது நாளும் வளம் பெறுவோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

said...

அதாவது அவளது அன்புக்கு நாம் பாத்திரம் ஆகிவிட்டால் இவையனைத்தையும் நாம் கேட்காமலேயே கொடுக்கக்கூடியவள். அதனால் அவளது அன்பினால் பெற முயல்வோம்.

said...

THANAM THARUM KALVI THARUM...... ADHAVADHU THANAM THARAKOODIYA KALIVIYAI THARUM ENDRU ARTHAM....