Friday, December 21, 2007

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் (பாடல் 70)


கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் - என் கண்கள் மகிழ்வு எய்திக் களிக்கும் படி நான் கண்டு கொண்டேன்


கடம்பாடவியில் - கடம்ப வனத்தில்


பண் களிக்கும் குரல் - இசை விரும்பி உறைகின்ற குரலையும்


வீணையும் கையும் - வீணையை ஏந்திய கைகளையும்

பயோதரமும் - அழகிய திருவயிற்றையும்

மண் களிக்கும் பச்சை வண்ணமும் - மண்மகள் விரும்பி மகிழும் பச்சை நிறமும்

ஆகி - பெற்று

மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே - மதங்கர குலத்தில் தோன்றிய என் தலைவியின் பேரழகையே.

அம்மையின் திருமேனி அழகைப் போற்றுகிறார் இந்தப் பாடலில். பச்சை நிறம் செழுமையின் வண்ணமாதலால் மண்களிக்கும் வண்ணம் என்கிறார். பண் பாடும் குரல் என்று சொல்வார்கள்; இவரோ பண்ணே களிக்கும் குரல் என்கிறார். கடம்பவனத்தையும் பச்சை நிறத்தையும் சொன்னதால் இது மீனாட்சியம்மையைப் போற்றும் பாடல் என்று நினைக்கிறேன். மதங்கர் குலம் என்பது எந்தக் குலம்? மதங்கரிஷி என்ற ஒரு முனிவரைப் பற்றி படித்திருக்கிறேன். அவர் குலத்தில் அன்னை தோன்றினாளா? சொல்லுங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கடைக்கண்களே என்று நிறைய இந்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரழகே என்று நிறைய அடுத்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கண், பண், மண், பெண்

மோனை: கண் - களிக்கும் - கண்டு - கொண்டேன் - கடம்பாடவி, பண் - பயோதரமும், மண் - மதங்கர், பெண் - பெருமாட்டி - பேரழகே.

18 comments:

said...

விளக்கம் நன்றாக/எளிமையாக இருக்கு.மிக்க நன்றி.

said...

இதற்கு மேல் எளிமையாக விளக்கம் கூற முடியாது. (பாடலும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக இருக்கிறது)

எப்படி இருப்பினும் குமரன் பதிவில் படித்தால் தான் புரிகிறது.

said...

மாதங்கி, மதாலஸா, மஞ்சுள வாக்விலாஸினி, மதங்க முனி சம்புஜா; கதம்பாரண்ய நிலையா

ஆகா, அருமை. நன்றி குமரன்.

said...

நன்றி குமார்.

'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையை நீங்கள் படிக்கவில்லையா? உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். என் 'கூடல்' வலைப்பதிவில் அதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

said...

உண்மை ஐயா. பாடல் எளிமையானது தான். அதனை அப்படியே கொடுத்திருக்கிறேன். அவ்வளவு தான். :-)

தங்களின் அன்பிற்கு நன்றி.

said...

மௌலி. நீங்கள் லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து இந்தப் பாட்டிற்கு ஏற்ற நாமங்களைத் தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதே போல் தந்திருக்கிறீர்கள். நன்றி. இன்னொன்றையும் எதிர்பார்த்தேன். அவற்றிற்கு விளக்கமும் மதங்கர் குலப் பெண்களில் அன்னை அவதரித்ததைப் பற்றியும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். சொல்லுங்களேன்.

said...

மதங்க முனியின் மகளாக அன்னை அவதரித்ததாக ப்ரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது குமரன், அதனாலேயே அவள் மாதங்கீ என்று அழைக்கப்படுகிறாள்.

மாதங்கீ என்பது மீனாக்ஷியின் இன்னொரு ரூபம்தான். பண்ட வதத்திற்குச் செல்லும் அன்னைக்கு மந்திரிணியாக கேயசக்ர தேரில் அன்னை மாதங்கீ செல்வதாக தேவீ பாகவதம் கூறுகிறது.

said...

ஆகா. இதைத் தான் எதிர்பார்த்தேன் மௌலி. அன்னை மீனாட்சிக்கு மாதங்கி என்ற பெயரும் இருப்பது உங்கள் பின்னூட்டம் படித்த பின்பு தான் நினைவிற்கு வந்தது. அன்னை மாதங்கியைப் பற்றி விரைவில் நீங்கள் பதிவில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆக இந்தப் பாடல் அன்னை மீனாட்சியைத் தான் போற்றுகிறது என்பது சரி தான் போலும்.

said...

அன்புக் குமரா!
கடம்பாடவி,பயோதரம்,மதங்ககுல எனக்குப் புரியாமல் இருந்த சொற்கள்.
கடம்பம்+அடவி ,நன்கு புரிந்தது.
மாதங்கி கேள்விப்பட்டது, இப்படி ஒரு பொருளுள்ளது தெரியாது.

said...

யோகன் ஐயா. இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்ல முனைகையில் எனக்கு கடம்பாடவி மட்டுமே உடனே புரிந்தது. பயோதரமும் மதங்க குலமும் கொஞ்சம் சிந்தித்துத் தான் இட வேண்டி இருந்தது. மதங்க குலப் பெண் என்பதை அப்போதும் முழுதாகப் புரிந்து கொள்ளாமல் மௌலி சொன்ன பிறகு தான் மாதங்கியைத் தொட்டுப் புரிந்து கொண்டேன்.

said...

//பயோதரமும் மதங்க குலமும் கொஞ்சம் சிந்தித்துத் தான் இட வேண்டி இருந்தது.//
பயோதரம் என்பது வடமொழியில் இருந்து வந்த சொல். மார்பகத்தினை குறிக்கும். உதரம் என்று மட்டுமே வந்தால் அது வயிறு. if it comes along with a prefix the meaning may be different as in dhamodhara, payodhara etc.paya means milk in sanskrit.
"வீணையும் கையும் பயோதரமும்" என்று மறுபடி அன்னையின் திருக்கோலத்தை சிந்தித்து பாருங்களேன். :-)

said...

நன்றி இராதா. பயோதரமென்றால் திருமுலைகள் என்ற பொருள் இது வரை தெரியாது.

said...

Payodharam enraal verum thirumaarbagam alla, paal nirainthirukum thiru thanangal, which implies her maternal instinct

said...

intha paadalai paraayanam seithaal nun kalaigalil sithi peralaam

said...

நன்றி திரு.கன்பூசியஸ்.

said...

முந்தைய பாடலும் இந்தப் பாடலும் அமரர் TRSன் குரலில்...

http://open.spotify.com/track/2NQATb6IkI5YKmVyVCGSdK

said...


மதங்க மஹரிஷி - தக்ஷணின் சகோதரன் ; இவரும் சிவனை மருகனாக அடைய வரம் பெற்றிருந்தார். அதன் பொருட்டு சக்தி - மாதங்கியாக , மதங்கரின் இல்லத்தில் வளர்ந்து, இறைவனை அடைந்தாள். திருவெண்காட்டுக்கு அருகில், நாங்கீர் என்ற சிறு கிராமத்தில், இந்த கோவில் உள்ளது !

said...

திருத்தம் : நாங்கூர் என்ற கிராமம் .