Sunday, February 25, 2007

தரங்கக் கடலுள் துயில் கூரும் விழுப்பொருளே (பாடல் 35)



திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? - திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?

எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? - எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?

தரங்கக் கடலுள் - அலைவீசும் கடலில்

வெங்கட் பணி அணை மேல் - வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல்

துயில் கூரும் விழுப்பொருளே - துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !

(பெருமாளும் அன்னையின் உருவம் என்று பட்டர் இந்தப் பாடலில் சொல்கிறார்)

படத்தில் இருக்கும் அன்னை சங்கு, சக்கரம், கதை ஏந்தி கருடனின் மேல் அமர்ந்திருக்கும் வைஷ்ணவி தேவி.

14 comments:

said...

விஷ்ணு ரூபிணிக்கு நமஸ்காரம்

said...

வாங்க கிஷோர். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'கடிமணம் நிகழும்'.

படம் இப்பாடலுக்கு மிக பொருத்தமாக உள்ளது.

ஆனால், வைஷ்ணவி தேவி என்றால் அன்னை விஷ்ணுதுர்கையை தான் குறிக்கும் (விஷ்ணுவின் தங்கை). அது எப்படி விஷ்ணு ரூபிணியாகும்? சற்று விளக்குங்களேன்.

ஜம்முவில் உள்ள ஸ்ரீ வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றபோது அங்கே எந்த உருவுமும் இல்லை மூன்று பிண்டங்கள் தான் இருந்தன. அதன் கதை மிக விசித்திரமானது, வினோதமானது அதை பற்றியும் நீங்கள் எழுத வேண்டும்.

நன்றி.

said...

பிரம்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம: என்பது லலிதாவின் ஒரு நாமாவளி....இங்கு விஷ்ணு ரூபத்தினை (நாராயணி) பாடலில் சுட்டுகிறார் பட்டர்.

இதேபோல "ஹ்ரிங்காரண்ய ஹரிண்யை" என்பதாக த்ரிசதியில் விஷ்ணு ரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

said...

சிவமுருகன். கடிமணம் நிகழும் என்ற பலனுக்கும் இந்தப் பாடலுக்கும் எப்படி தொடர்பு என்று புரியவில்லை.

வைஷ்ணவி என்றாலும் மௌலி ஐயா சொன்னது போல் நாராயணி என்றாலும் விஷ்ணு ரூபிணியான விஷ்ணு துர்க்கையைக் குறிக்கும். விஷ்ணு மாயையான விஷ்ணு துர்க்கை விஷ்ணுவின் அம்சம் என்பதால் தான் அவளை விஷ்ணுவின் தங்கை என்று சொல்கிறார்கள்.

வைஷ்ணோ தேவியின் கதை எனக்குத் தெரியாது சிவமுருகன்.

**

மௌலி ஐயா, பொருத்தமான சுலோக வரிகளை இங்கே சொன்னீர்கள். மிக்க நன்றி.

said...

அம்பிகை படம் அழகு.
அதுவும் கருட வாகினி.

அவள் துயின்று நம்மைக் காக்கிறாளா?
அண்ணனும் தங்கையும்
நம் மனதில் அமரட்டும்.மன
அலை ஓயும்.
நன்றி குமரன், படிக்கப் படிக்க அமைதி கிடைக்கிறது.

said...

குமரா!
இங்கே!; சீறடியா? சீரடியா பொருந்தும்.!
ஏனையவை புரிந்தன . நன்று

said...

அண்ணனும் தங்கையும் அறிதுயில் கொள்கிறார்கள் அரவணை மேல். நன்றி வல்லியம்மா.

***

நல்ல கேள்வி யோகன் ஐயா. நானும் சீறடி என்று பார்த்தவுடன் சீரடியோ என்று குழம்பினேன். உடனே மதுரை திட்டத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கேயும் சீறடி என்றே இருந்தது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். இப்போது நீங்கள் கேட்ட பிறகு கூகிளாரைக் கேட்டேன். சீறடி என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் தருகிறார். இணைய அகராதியைப் பார்த்த போது சீறடி என்பதற்கு சிறிய + அடி என்று விளக்கம் தந்துள்ளார்கள். ஆக இங்கே சீறடி என்பது எழுத்துப் பிழை இல்லை ஐயா.

said...

நானும் சீறடி என்றே படித்திருக்கிறேன் இப்பாடலில்.

said...

நன்றி சேதுக்கரசி. பழைய இடுகைகளையும் படித்தீர்களா?

said...

இதுவரை மிகச் சில பதிவுகள் தான் படித்திருக்கிறேன். நேரமிருக்கையில் படிக்கிறேன். படித்தால் கட்டாயம் பின்னூட்டம் இடுவேன், எனவே அப்போது தெரியும் உங்களுக்கு.. படித்துவிட்டேன் என்று :-)

said...

அன்னையின் படம் வெகு பொருத்தம்.

said...

உண்மை தான் கவிநயா. தேடி எடுத்து வைஷ்ணவியின் திருக்கோலத்தை இட்டேன். நன்றி.

said...

அலைகள் புரண்டெழும் பாற்கடலின் மீது ஆதிசேஷனாகிய பாம்பணை மீது பள்ளி கொண்டு துயிலும் மேலான பொருளே! ஈசனின் திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனின் மணம் கமழ்கின்ற உன்னுடைய சிற்றடியை, எளியவர்களான எங்களைப் போன்றோரின் சிரங்களின் மீது வைத்தருள்வதாயின் எங்கள் ஒப்பற்ற தவத்தின் சிறப்புத்தான் என்னே என வியக்கிறோம். எண்ணற்ற தேவர்களுக்கும் கூட இத்தகைய சிறந்த பாக்கியம் கிட்டுமோ? கிட்டாது.

Intha paadal aasi peruvathu pol ullathaal, ithai paraayanam seithal thirumanam nalla padiyaaga kaikoodum