Thursday, November 08, 2007

உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் (பாடல் 64)


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் - தம்மை வணங்குபவர்களிடமிருந்து கையுறைகளை (காணிக்கைகளை) விரும்பிக் கவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளாத, அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன்


உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் - இந்தக் குறைகள் இல்லாத உன்னிடம் அன்பு பூண்டு கொண்டேன்


நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் - என்றும் எப்போதும் உன் புகழையே போற்றிப் பாடுவேன்


திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன்.

***

தாம் வணங்கும் தெய்வத்தை அன்றி மற்ற தெய்வங்களை 'வீணே பலி கவர் தெய்வங்கள்' என்று சொல்வது ஒவ்வொரு பக்தரின் இயற்கை. 'சர்வ தர்மான் பரித்யஜ்ய' என்று கீதையில் கண்ணன் சொல்லுவதையே இங்கு அபிராமி பட்டர் சொல்கிறார் என்று என் ஆசிரியர் ஒருவர் சொல்வார். திருப்பாவையிலும் 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்று ஆண்டாள் சொல்வதும் இதுவே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வீணருக்கே என்று நிறைய இந்தப் பாடல் வீணே என்று தொடங்கியது. இந்தப் பாடல் ககனமுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ககனமும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வீணே, பூணேன், பேணேன், காணேன்

மோனை: வீணே - மிக்க, பூணேன் - பூண்டுகொண்டேன் - புகழ்ச்சி, பேணேன் - பொழுதும் - ப்ரகாசம், காணேன் - ககனமுமே.

5 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பக்தி பெருகும்'.

said...

உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் என்றதால் 'பக்தி பெருகும்' என்ற பயன் மிகப் பொருத்தம் சிவமுருகன். நன்றி.

said...

குமரா!
கொடுப்பவர்களிடம் அன்பு பூணுவது இயல்பே!!
அது கொடுக்கும் தெய்வமானாலும்.

said...

சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

நன்றி.

said...

//உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே//

அப்படியே அவள் அருளல் வேண்டும்.