Sunday, November 04, 2007

தேறும்படி சில ஏதுகள் காட்டுவாள் (பாடல் 63)


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் - சென்று அடைய வேண்டிய இடத்திற்கு தேறிச் செல்லும் படி சில வழிகள் காட்டுபவள் அபிராமி அன்னை

சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் - அப்படி அவள் காட்டிய வழிகளில் ஆறு சமயங்கள் முதன்மையானவை. அவற்றை அருளி அவற்றின் தலைவியாய் இவள் இருப்பது அறிந்திருந்தும்

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - வேறு சமயம் உயர்ந்தது என்று கொண்டாடும் வீணர்கள் செய்வது

குன்றில் கொட்டும் தறி குறிக்கும் - மலையை ஒரு சிறு தடி கொண்டு தகர்க்க முயல்வார்களை ஒத்தது.

***

ஆறு சமயங்களாவன: சூரியனை வணங்கும் சௌரம், குமரனை வணங்கும் கௌமாரம், சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், சக்தியை வணங்கும் சாக்தம், கணபதியை வணங்கும் காணபத்யம்

***

அந்தாதித் தொடை:சென்ற பாடல் சிந்தையதே என்று நிறைய இந்தப் பாடல் தேறும்படிக்கு என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் வீணருக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் வீணே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தேறும், கூறும், ஆறும், வேறும்

மோனை: தேறும் - சில - செல்கதிக்கு, கூறும் - குன்றில் - கொட்டும் - குறிக்கும், ஆறும் - அறிந்திருந்தும், வேறும் - வீணருக்கே

6 comments:

said...

வீணருக்கு - தேறும்படி என்று சொல்வதால்! இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்ய 'நல்லறிவு உண்டாகும்'.


//ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்//
அபிராமி அந்தாதி என்பது ஆறு சமயங்களுக்கும் பொதுவான ஒரு பாடல்.

said...

உண்மை சிவமுருகன். நன்றி.

said...

//ஆறும் தலைவி இவளாய் இருப்பது //

சாக்தத்தின் ரஸமே இதுதான்....

நன்றி குமரன்.

said...

நன்றி மௌலி

said...

//வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே//
குமரா!
பட்டர் காலத்திலும் இந்த வீண்வேலை வீணர்கள் இருந்துள்ளனர்.

said...

அந்த வீணர்கள் எக்காலத்திலும் இருக்கிறோம் ஐயா. :-)