Sunday, October 07, 2007

சரணாம்புயம் அன்றி ஒரு தஞ்சமும் இல்லை (பாடல் 58)


அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

அருணாம்புயத்தும் - அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்


என் சித்தாம்புயத்தும் - என் மனமெனும் தாமரையிடத்தும்

அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் - அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின்


தகை சேர் நயனக் கருண அம்புயமும் - பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும்


வதன அம்புயமும் - திருமுகம் என்னும் தாமரையும்

கர அம்புயமும் - திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்

சரண அம்புயமும் - திருவடிகள் என்னும் தாமரைகளும்

அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்

***

அன்னையின் திருவுருவம் தாமரைப் பொய்கையை ஒத்து இருக்கிறது போலும். அம்புயம் என்பது அம்புஜம் என்னும் வடசொல்லின் திரிபு என்பர். அம்பு - நீர்; ஜ: - பிறந்தது; நீரில் பிறந்தது என்று பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் அருளே என்று நிறைய இந்தப் பாடல் அருணாம்புயம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தஞ்சமுமே என்று முடிய அடுத்தப் பாடல் தஞ்சம் பிறிது இல்லை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அருணாம்புயம், தருணாம்புயம், கருணாம்புயம், சரணாம்புயம்

மோனை: அருணாம்புயம் - அமர்ந்திருக்கும், தருணாம்புயம் - தையல் - தகை, கருணாம்புயம் - கராம்புயம், சரணாம்புயம் - தஞ்சமுமே.

10 comments:

said...

குமரா!
அம்புயம் = தாமரையாகப் போற்றியுள்ளார்.
அம்பு எனில் வடமொழியில் நீரைக் குறிக்குமா??
அப்பு என தமிழில் நீரைக் குறிப்பிடுவார்களே!

said...

யோகன் ஐயா,

அம்பு, அப்பு இரண்டுமே நீரைக் குறிக்கும் சொல் என்று நினைக்கிறேன். அப்பு அம்பு என்றோ அம்பு அப்பு என்றோ திரிந்திருக்கலாம். எது எம்மொழிச் சொல் என்ற தெளிவு எனக்கு இல்லை. இரண்டு மொழிகளிலும் அம்பு, அப்பு என்பவை நீரைக் குறிக்கக் கண்டிருக்கிறேன்.

said...

அம்புஜம்- இதானா விளக்கம்?
அந்தாதி பற்றி ஒருமுறை "வாத்தியார் சார்" சொல்லியிருந்தது இப்போது ஞாபகம் வந்தது.

said...

அபிராமி பட்டரின் அந்தாதிக்கு எளிய விளக்கம் - அருமை - வாழ்க !! தொடர்க !!

said...

அம்புஜாக்ஷி, அம்புஜவல்லி எல்லாம் இதுவே....நன்றி குமரன்.

said...

வடுவூர் குமார். எந்த வாத்தியார் சார் அந்தாதியைப் பற்றி சொன்னார்?

said...

நன்றி சீனா ஐயா.

said...

ஆமாம் மௌலி. நன்றி.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'இறையுணர்வால் மன அமைதி பெறலாம்'.

said...

சித்தாம்புயத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையால் மன அமைதி கிடைக்கும். உண்மை சிவமுருகன். நன்றி.