Friday, February 10, 2006

144: காலன் வரும்போது வெளி நிற்கவே (பாடல் 18)

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் - உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,

உங்கள் திருமணக்கோலமும் - உங்கள் திருமணக் கோலத்துடனும்

சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து - என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து

வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே - கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.

14 comments:

said...

நன்றாக உள்ளது

said...

நன்றி என்னார் ஐயா.

said...

Kumaran sir,

vishnu chitthan kadhai muzhuvadhum padithu vitten.. matra padhipugalayum kandippaga vaasikiren.
Ungaludaya indha nalla muyarchikku enadhu vaazhthukkal.

-vijay

said...

ரொம்ப நன்றி விஜய். தொடர்ந்து படித்துக் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

said...

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.

திரு. குமரன் அவர்களே இதே கருத்தில் ஆதிசங்கரரும். பாரதியாரும் எப்படிபாடியிருக்கிறார் என்று பார்கலாமா.ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் ஒரு ஸ்லோகத்தில்
க்ருந்தாந்ஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத்
தஹச்சிந்திபிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மாபீரிதி த்வம்
புரஸ்ஸக்திபாணிர் மமா யாஹி ஸீக்ரம்

என்னுடைய மரணகாலத்தில் எமனுடைய தூதர்கள் மிகுந்த கோபத்தோடு என்னைப் பார்த்து கொல்லு,வெட்டு என்று கூறிக்கொண்டு வருவார்கள். நீ அப்போது என்ன செய்யவேண்டும் தெரியுமா
உன் வாகனமான மயிலின்மீது ஏறிக்கொண்டு கையில் உனது சக்தி ஆயுதத்துடன் என் எதிரில் சீக்கிரமாக(தாமதம் செய்யாமல்) வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்
பாரதியாரோ
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன் தனதாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு நாலாயிரம் காதம் விட்டகல் உனை விதிக்கிறேன் --ஹரி நாராயணனாக நின்
முன்னே உதிக்கிறேன் அட காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்
என்ன ஒரு தைர்யம் மற்றும் உரிமை இவர்களுக்கு கடவுளுக்கே ஆணையிடுகிறார்கள்.
உங்களுடைய விளக்கம் பதிகத்துக்கு மிக அழகு சேர்க்கிறது இந்தப்பதிவின் இடைவெளியை கொஞ்சம் குறைத்து நிறையயிடுங்கள்.ஜிரா தங்கள் கருத்தை எதிர்பார்கிறேன் அன்பன் தி. ரா. ச

said...

மிக்க நன்றி தி.ரா.ச. சார். ஆதிசங்கரரின் ஸ்லோகத்தையும் பாரதியாரின் பாடலையும் கொடுத்து பொருளும் சொன்னதற்கு. இந்தப் பாடலுக்குப் பொருத்தமான பாடல்கள் இரண்டும். பெரியாழ்வாரும் இந்தக் கருத்தில் 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்' என்று நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் அல்லவா?

என் எல்லா வலைப்பூக்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு வலைப்பூவில் தொடர்ந்து பல பதிவுகள் இட்டால் ஒரு தொடர்ச்சி படிப்பவர்களுக்குக் கிட்டுகிறது. அதனால் இரண்டு இரண்டு வலைப்பூக்களில் ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்தலாம் என்று எண்ணுகிறேன். இப்போது அபிராமி அந்தாதியிலும் சகலகலாவல்லி மாலையிலும் கவனம். அந்தாதி 25 பாடல்களுக்கும், சகலகலாவல்லி மாலை எல்லாப் (10) பாடல்களுக்கும் பொருள் பார்த்து முடித்தப் பின் மற்ற வலைப்பூக்களுக்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

'கூடல்', 'படித்ததில் பிடித்தது', 'இந்தியக் கனவு 2020' இந்த வலைப்பூக்கள் மட்டும் அவ்வப்போது கவனம் பெறும். அவ்வப்போது ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதலாம் என்று எண்ணுகிறேன்.

said...

இரட்டையாக கவனம் பெறும் வலைப்பூக்கள்:

1. அபிராமி அந்தாதியும் சகலகலாவல்லிமாலையும்

2. பஜகோவிந்தமும் மதுரையின் ஜோதியும்

3. திருவாசகமும் பாட்டுக்கொரு புலவனும்

4. விஷ்ணு சித்தனும் கோதைத் தமிழும்

said...

அருமையான விளக்கம் குமரன்.

கண்ணெழுந்தும் கையெழுத்தும் முறையாகாப் பின்னழுத்தும் வயதில் எண்ணெடுத்து ஏடெடுத்து இறைவன் பண்ணெடுத்துப் படிப்பது எங்ஙனம்! ஆகையால் இன்றே சொல்வோம். இறைவன் பெயரை நன்றே சொல்வோம். இறையருளை வெல்வோம்.

said...

நல்ல பாடல் இராகவன். யார் பாடிய பாடல் இது? மிக்க நன்றி.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மரணபயம் நீங்கும்'

said...

are you the same who writes in agaththiyar group??

anbudan
jeevaa

said...

இல்லை ஜீவா. அகத்தியர் குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை உள்நுழைந்து பார்த்ததில்லை. யாராவது அங்கும் அபிராமி அந்தாதி பொருளுரை எழுதுகிறார்களா? இல்லை அவர் எழுதுவதும் நான் எழுதுவதும் ஒரே மாதிரி இருந்ததால் அப்படி கேட்கிறீர்களா?

said...

இத்தனை ப்ளாக் எப்படித்தான் எழுதறீங்களோ..

//கண்ணெழுந்தும் கையெழுத்தும் முறையாகாப் பின்னழுத்தும் வயதில் எண்ணெடுத்து ஏடெடுத்து இறைவன் பண்ணெடுத்துப் படிப்பது எங்ஙனம்! ஆகையால் இன்றே சொல்வோம். இறைவன் பெயரை நன்றே சொல்வோம். இறையருளை வெல்வோம்.//

இந்தப் பாட்டு அருமை!

said...

இத்தனை வலைப்பதிவுகளிலும் ஒரே நேரத்தில் எழுத முடியுமா என்ன? அப்படி எழுதுவதில்லை கவிநயா. இப்போது இந்த அந்தாதிப் பதிவிலும் 'கூடல்' பதிவிலும் 'ஸ்தோத்ரமாலா' பதிவிலும் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது 'பாடல்கள்' பதிவுகளிலும் (நான்கு கடவுளர்கள் மேல் இருக்கின்றன) எழுதுவேன். மற்ற பதிவுகள் எல்லாம் தொடங்கியவுடன் எழுதிய சில இடுகைகளுடன் தூங்குகின்றன.

ஆர்வக்கோளாறில் நிறைய பதிவுகள் தொடங்கிவிட்டேன். ஒவ்வொன்றாக நிறைவு செய்யவேண்டும்.

இராகவன் இப்படியெல்லாம் அருமையான பாடல்கள் எழுதுவார். அவருடைய 'இனியது கேட்கின்' வலைப்பதிவைப் பாருங்கள். சுட்டி இந்தப் பதிவில் வலப்பக்கத்தில் இருக்கிறது.