Sunday, September 16, 2007

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் (பாடல் 56)


ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே

ஒன்றாய் அரும்பி - ஒரே பொருளாய் முதலில் அரும்பி

பலவாய் விரிந்து - பல பொருட்களாய் விரிந்து

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் - இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள் - அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்)

என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு - (அப்படிப்பட்டவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள்.


இப்பொருள் அறிவார் - (அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள்

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே - பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஒன்றில்லையே என்று நிறைய இந்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஐயனுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ஐயன் அளந்தபடி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஒன்றாய், நின்றாள், பொன்றாது, அன்றாலிலை.

மோனை: ஒன்றாய் - உலகெங்குமாய், நின்றாள் - நீங்கி - நிற்பாள் - நெஞ்சினுள்ளே, பொன்றாது - புரிகின்றவாறு - பொருள், அன்று - ஆலிலை - ஐயனுமே.

6 comments:

said...

இறைவனைப் புகழும் ஒவ்வொரு செய்யுளும் சிறப்பு என்றால், ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வொரு சிறப்பு. அப்படி இந்தச் செய்யுளில் சிறப்பாக இருப்பது ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நிற்பாள் என்ற வரி.

மலர் நாம் அனைவரும் காண்பது. அது அரும்பாக இருக்கையில் ஒரு கூம்புதான். ஆனால் அந்த ஒற்றைக் கூம்பு மலர்ந்து விரிகையிலே எத்தனை இதழ்கள். மகரந்தங்கள். தேன் துளிகள்...அடடா! ஒரு அரும்பில்தான் அத்தனையும் இருக்கிறது.

அப்படி நாதமும் விந்தும் கலந்த பொழுது ஒரு ஓங்காரமாக அரும்பி இந்த உலகமாக விரிந்தவளைப் புகழாமல் எப்படி இருப்பது!

said...

இராகவன். ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து என்பதற்கு மிக அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இவ்வுலகு எங்குமாய் நின்றாள் என்பதற்கும் இதே போன்ற விளக்கம் உண்டா?

said...

குமரா!!
இது ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க எனும் சிவபுராண அடிகளை
ஞாபகப் படுத்துகிறது.

said...

ஆமாம் யோகன் ஐயா. எனக்கும் அந்த வரிகள் நினைவிற்கு வந்தன.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'யாவரையும் வசிகரிக்கும் ஆற்றல் உண்டாகும்'.

said...

இந்தப் பயனுக்குப் பாடலில் என்ன குறிப்பு இருக்கிறது என்று தெரியவில்லை சிவமுருகன். முதன்முறையாக இப்படி ஒரு பயன் சொல்லப்பட்டிருக்கிறது.