Friday, August 29, 2008

எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு)

அபிராமி அந்தாதிப் பொருளுரை நிறைவாகும் இந்த நல்வேளை! இதுவும் ஒரு வகையில் அப்த பூர்த்தி தான்! Oct 2005-இல் துவங்கிய தேர், பதிவு வீதிகளில் ஆடி ஆடி, இதோ நிலைக்கு வருகிறது! நிறைவுக்கு வருகிறது!
சஷ்டி+அப்த+பூர்த்தி = அறுபது+ஆண்டு+நிறைவு!
அந்தாதிப் பொருளுரையோ, த்ரியப்த பூர்த்தி=மூன்றாண்டு நிறைவு!

இது அப்த பூர்த்தி மட்டுமில்லை! ஆப்த பூர்த்தியும் கூட! விரும்பிய எல்லாம் நிறைவேற்றித் தரும் தமிழ்ப் பனுவல்! நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே வருகிறது!
அதே போல் அபிராமி பட்டருக்கு, நெருப்பின் நடுவிலே, தாய் மொழியில், தெய்வத் தமிழ் மொழியில், துதியும் பனுவலும் இயல்பாகவே வந்து விட்டது!
இத்தனைக்கும் அவர் வடமொழி வித்தகர்! சகல சாஸ்திர பண்டிதர்! இருப்பினும் அம்மா என்று அழைக்கும் போது, அம்மா மொழியில் தானே அழைக்க முடியும்!

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு என்று பாடி விட்டார் பட்டர்! தோன்றி விட்டாள் அன்னை!
விழிக்கே அருள் உண்டு என்ற....
பாட்டை எடுத்த போது தான், அன்னைத் தோட்டை எடுத்தாள்!
வீசினாள், முக வானிலே சந்திரனைப் பூசினாள்!

ஒரே நேரத்தில், தை அமாவாசையில், பூமிக்கு இரண்டு சந்திரன்கள்!
பட்டருக்கோ அக நிலவிலே அவள் முக நிலவு! மற்றவர்க்கோ வானிலே புற நிலவு!
சாட்சி கேட்கும் புற நிலவு தேய்ந்து விடும்!
ஆனால் நம் அக நிலவும் முக நிலவு மட்டும் தேயவே தேயாது!

வாருங்கள் அபிராமி அந்தாதி பொருளுரையின் இந்த அப்த பூர்த்திக்கு, திருக்கடையூர் சென்று அம்மாவைச் சேவிப்போம்! தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தி அழகு பார்ப்போம்!


மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் திருக்கடவூர்! திருக்கடையூர் என்றும் சொல்லலாம்! கடம்=பானை, கலம்! கடை=கடைதல்! எனவே ரெண்டுமே சரி தான்!
கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்!
நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எதுங்க?

இறைவன்! இறைவன் தான் கொள்கலம்! அதில் தான் அமுதம்/இன்பம் கொள்ளும்!
நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை ஏதாவது நிறைக்க வேண்டி இருக்கும் போது தான, நமக்குக் கலம் தேவைப்படுகிறது!:)

அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, அமுதம் வழங்கும் அதிகாரி சிவபெருமான்! அதான், ஈசனே கொள்கலமாய், அமிர்தம் கொண்டுள்ள கடமாய் வந்தான்! தன்வந்திரிப் பெருமாள் கைகளிலும், மோகினியின் கைகளிலும் தவழ்ந்தான்!
அந்த அமிர்த கடமே பின்னர் லிங்கமாய் மாறி விட்டது! அதனால் தான் அமிர்த கட ஈஸ்வரர்! அவர் தர்ம பத்தினி அபிராமி அன்னை!

பார்த்தீர்களா? பாற்கடல் கடைந்த போது தான் எத்தனை எத்தனை தத்துவங்கள்! எத்தனை எத்தனை தெய்வ வடிவங்கள்!
கூர்மாவதாரம், நீலகண்டன், அலைமாகள் ஸ்ரீ மகாலக்ஷ்மி, மோகினித் திருக்கோலம், தன்வந்திரிப் பெருமாள், அமிர்த கடம், அமிர்த கட ஈஸ்வரர், அருள்வாமி அபிராமி! - இப்படி தெய்வத் திருவுலா!


சரி, ஏன் அறுபதாம் கல்யாணம், மணி விழா, சஷ்டி அப்த பூர்த்தியைத் திருக்கடையூரில் செய்து கொள்ள நினைக்கிறார்கள்?
இது மார்க்கண்டேயனுக்காக, யமனை வென்ற தலம்! சிரஞ்சீவித் தலம்!
அதான், என்றும் சீரஞ்சீவி-சுமங்கலியாக வாழ்ந்து, இல்லறம் நடாத்த, இங்கு செய்து கொள்கிறார்கள்!
கணவரின்,
59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்!

யமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை!
அட, அம்பிகை இங்கே எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!!
இப்படி, இந்தத் தலத்தில் இப்படி இரண்டு ஈஸ்வரர்கள்! இரண்டு அம்பிகைகள்!
மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை! அமிர்தகடேஸ்வரர்-அபிராமி!!

அறுபதாம் கல்யாணம் செய்து கொள்ள திருக்கடையூர் தான் போக வேணுமா?
அவசியம் இல்லை! அவரவர் நிலைமையைப் பொறுத்தது தான்!
நித்ய கல்யாணமாய் இருக்கும் பல ஆலயங்களிலும் செய்து கொள்ளலாம்!
தினமும் கல்யாணம் நடந்து கொண்டே இருக்கும் தலங்கள் பல! நித்ய சுமங்கலித் தலங்கள் அவை!
சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை இங்கெல்லாம் நித்யமும் கல்யாணம் தான்! ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன ஈஸ்வரனுக்கும் நித்ய கல்யாணம்!
அவரவர் இல்லத்திலும் செய்து கொள்வார்கள்! எங்கு செய்து கொண்டாலும், அது பெருமாள் கோயிலோ, சிவன் கோயிலோ, வீட்டிலோ,
அங்கு மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை ஆகிய இருவரையும், மந்திரப் பூர்வமாகக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வைப்பார்கள்!
எப்பவுமே, சங்கரன்-சங்கரிகள் ஆசியோடு தான் இந்த விழா!


வாருங்கள்...
அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது! கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்! ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்!

கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து, பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்! நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்!

இதோ அப்பனின் சன்னிதி!
அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்!
வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்? ஜாதி மல்லி தான் தல விருட்சம்!
மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா? மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன!
தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்! திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?


இதோ வந்து விட்டோம்!
அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி!
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை!
சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்! சாம்பிராணி அகிற் புகை!
செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன!
மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்! பதினாறு வகையான உபசரிப்புகள்! தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்!

இதோ திரை விலகுகிறது!
ஜகத்ஜோதி, ஜோதி ஸ்வரூபிணியாய், மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே!
ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது! எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்!

பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்!
வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது! காற்சிலம்பு மின்னுகிறது!
அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது!
அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி! அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்!
(பாதாரவிந்த தீப சேவை)

அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி!
அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே!
அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே!

அபய ஹஸ்தம் = அஞ்சேல் எனுமொரு கரம்!
வரத ஹஸ்தம் = வா, தந்தேன் எனுமொரு கரம்!
கரங்களிலே கலகலவென வளை குலுங்க,
புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க,

மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க,
பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்!
நமஸ்தேஷூ மகாமாயே, ஸ்ரீபீடே, சுர பூஜிதே!
சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே!

(கரதல கமல தீப சேவை)

அம்மாவின் சக்கரத் தோளிலே பச்சைக்கிளி!
சங்குத் தோளிலே செங்கரும்பு!
நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்!
தம்பதிகளும், காதலரும், இன்னும் எல்லாரும் கண்ணாரச் சேவித்துக் கொள்ளுங்கள்!
சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ!
மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை)
சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே!
சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!!


அன்னையின் திருமுக தரிசனம்! கோடி சந்திரக் குளிர் பிரகாசம்!
இவள் தாடங்கம் வீசித் தானா நிலவு உதிக்க வேண்டும்?
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், நெற்றியிலே விபூதிச் சுட்டி!
கருவிழிக் கண்கள் கடாட்சித்து நிற்க,
மீன-அக்ஷி, காம-அக்ஷி, விசால-அக்ஷி என்று அனைத்து அன்னையரின் கடைக்கண் பார்வையும், எங்கள் அபிராமியின் கருவிழியிலே!
(நேத்ரானந்த தீப சேவை)

காதிலே தாடங்கம் மின்ன, ஒய்யாரக் கொண்டையிலே ஆண்டாள் கொண்டை அலங்கரிக்க, திருவாசி மாலைகள் பின்னே திகழ,
அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்! அருள் கோலம் காணீர்!
சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை)

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!


அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!


அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!

இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!


நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்!

(வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்!
அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்)


**************************************************

அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள். அன்னையின் ஆரத்தி பாடலை தந்துதவிய கவிநயா அக்காவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்!

*************************************************

அபிராமி அந்தாதியின் ஒலிச்சுட்டியைத் தர வேண்டும் என்று சில நண்பர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொற்படி இதோ திரு. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதியின் ஒலிச்சுட்டிகள்:

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி, நான்காம் பகுதி.

திரு.புலவர் கீரன் அபிராமி அந்தாதிக்குச் சொன்ன விரிவுரையை இங்கே காணலாம்.

13 comments:

said...

அபிராமி அன்னை திருவடிகள் சரணம்!

சுட்டிகளுக்கு நன்றி குமரா.

said...

ரொம்ப நன்றி கவிநயா அக்கா.

said...
This comment has been removed by a blog administrator.
said...

Thank you very much for your wonderful efforts.

Would be happier if you could provide all the postings as a PDF link also.

Thanks again.

-Sathish Kumar K

said...

thanks for the posting

said...

மிக்க நன்றி.

said...

நன்றி திரு. கன்பூசியஸ்.

said...


வணக்கம்!

அன்னை அபிராமி அன்புக் குமரா!நற்
பொன்னை நிகா்த்ததுன் பூவலை! - என்வாழ்த்து!
மேலும் தொடருக மேன்மைதரும் ஆக்கங்கள்!
மூளும் உணா்வை மொழிந்து!

said...

ஆகா. அருமையான வெண்பா வாழ்த்து! மிக்க நன்றி ஐயா!

said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Communicative English training center
Corporate English classes in Chennai
Corporate English training
English training for corporates
Corporate language classes in chennai
Spoken English Training
Workplace English training centre
Workplace English training institutes
Workplace Spoken English training

said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher

said...

மிகவும் அருமை நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/