Wednesday, January 10, 2007

மணியே! மணியின் ஒளியே! (பாடல் 24)



மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

மணியே - மாணிக்க மணியே!

மணியின் ஒளியே - மாணிக்க மணியின் ஒளியே!

ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!

அணியும் அணிக்கு அழகே - அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!

அணுகாதவர்க்குப் பிணியே - நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

பிணிக்கு மருந்தே - உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

***

உலக இன்பம் வேண்டி அல்லவா இறையை அன்றி மற்றவற்றையும் மற்றவர்களையும் பணிவது? உன்னைப் பணிந்த பின் மற்றவரைப் பணியேன் என்றது உலக இன்பங்கள் உன்னைப் பணிந்தததால் தானே கிடைக்கும்; அதனால் இறையைத் தவிர மற்றவரைப் பணியும் தேவை இல்லை என்பதைச் சொல்லியது.

3 comments:

said...

இதற்கு அடுத்த வரிகள், சொல்லடி அபிராமி..வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ,நம்ப ஊர் TMS கணிர்க்குரல்,அபிராபி அந்தாதியை அழகாக எடுத்தாண்டு,அடுத்த வரிகளை பொருத்தமாக வைத்த கவியரசர்,KVMன் இசை,மறக்க முடியுமா!

அன்புடன்
பாண்டியன்
பி.கு.நானும் மதுரைக்காரன்தாய்ங்

said...

இதற்கு அடுத்த வரிகள், சொல்லடி அபிராமி..வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ,நம்ப ஊர் TMS கணிர்க்குரல்,அபிராபி அந்தாதியை அழகாக எடுத்தாண்டு,அடுத்த வரிகளை பொருத்தமாக வைத்த கவியரசர்,KVMன் இசை,மறக்க முடியுமா!

அன்புடன்
பாண்டியன்
பி.கு.நானும் மதுரைக்காரன்தாய்ங்

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'தீராத வியாதிகள் தீரும்'.