Sunday, March 23, 2008

வஞ்சகர் நெஞ்சு அடையாள்! (பாடல் 84)



உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே


உடையாளை - உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை


ஒல்கு செம்பட்டுடையாளை - ஒளிவீசும் சிவந்த பட்டு உடையை அணிந்தவளை


ஒளிர்மதிச் செஞ்சடையாளை - ஒளிரும் நிலவை அணிந்த செம்மையான சடையை உடையவளை


வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சகர்களின் நெஞ்சில் தங்காதவளை


தயங்கு நுண்ணூல் இடையாளை - தயங்கித் தயங்கி அசையும் நுண்ணிய நூல் போன்ற இடையை உடையவளை


எங்கள் பெம்மான் இடையாளை - எங்கள் தலைவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பவளை


இங்கு என்னை இனிப் படையாளை - இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளை



உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள்

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் உடையவரே என்று நிறைய இந்தப் பாடல் உடையாளை என்று தொடங்கியது. இந்தப் பாடல் பார்த்திருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: உடையாளை, சடையாளை, இடையாளை, படையாளை

மோனை: உடையாளை - ஒல்கு - உடையாளை - ஒளிர்மதி, சடையாளை - தயங்கு, இடையாளை - எங்கள் - இடையாளை - இங்கு - என்னை - இனி, படையாளை - படையாவண்ணம் - பார்த்திருமே.

8 comments:

said...

//உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள்//
குமரா!
வணங்குவோம்.

said...

நானும் வணங்கிக் கொள்கிறேன் ஐயா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'இக்கட்டான நிலைகள் நீங்கும்'.

said...

நன்றி சிவமுருகன்.

said...

அழகான பாடல்.

//இங்கு என்னை இனிப் படையாளை - இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளை//

அவருக்கு இனிப் பிறவி கிடையாதென்பதில் எவ்வளவு உறுதி.

//உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள்//

அப்படியே அவள் நமக்கும் அருளல் வேண்டும்.

said...

என் வேண்டுதலும் அதுவே கவிநயா அக்கா.

said...

*உடையாளை* ஒல்கு செம்பட்டு *உடையாளை* ஒளிர்மதிச் செஞ்
*சடையாளை* வஞ்சகர் நெஞ் *சடையாளை* தயங்கு நுண்ணூல்
*இடையாளை* எங்கள் பெம்மான் *இடையாளை* இங்கு என்னை இனிப்
*படையாளை* உங்களையும் *படையா* வண்ணம் பார்த்திருமே

மண்ணிலும் விண்ணிலும் எண்ணிலும் எழுத்திலும் மேவு பராசக்தியே !!

said...

பாடலின் அழகை எடுத்துக் காட்டியதற்கு நன்றி இராதா.