Thursday, March 13, 2008

இந்திரன் ஆகும் வழி (பாடல் 83)


உலகத்தில் இருக்கும் எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திர பதவி இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களுக்கெல்லாம் உயர்ந்த இன்பம் என்பது வெள்ளிடைமலை. அப்படிப்பட்ட இந்திர பதவியை வேண்டி அடைய வேண்டாதபடி என்றைக்கும் உடையவராக ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இந்தப் பாடலில் சொல்கிறார் அபிராமி பட்டர்.

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே


விரவும் புது மலர் இட்டு - தேன் சிந்தும் புதிய மலர்களை இட்டு

நின் பாத விரைக்கமலம் - மணம்மிக்க உன் திருவடித் தாமரைகளை

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் - இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையவர்கள்


இமையோர் எவரும் பரவும் பதமும் - தேவர்கள் எல்லாம் போற்றி வணங்கும் இந்திர பதவியையும்

அயிராவதமும் - வெள்ளையானையாம் ஐராவதத்தையும்

பகீரதியும் - ஆகாய கங்கையையும்

உரவும் குலிசமும் - வலிமையுடைய வஜ்ஜிராயுதத்தையும்

கற்பகக் காவும் -வேண்டியதை எல்லாம் தரும் கற்பகச் சோலையையும்

உடையவரே - இயல்பாகவே உடையவர்கள் (வருந்தி அடைய வேண்டாம்).

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரகே என்று நிறைய இந்தப் பாடல் விரவும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் உடையவரே என்று நிறைய அடுத்தப் பாடல் உடையாளை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விரவும், இரவும், பரவும், உரவும்

மோனை: விரவும் - விரைக்கமலம், இரவும் - இறைஞ்ச - இமையோர், பரவும் - பதமும் - பகீரதியும், உரவும் - உடையவரே.

5 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'ஏவலர் பலர் உளராகும்'.

said...

கடந்த வாரம் இந்த பதிவை பார்த்துவிட்டு சித்திரை திருவிழா செல்வதற்க்கு "பயண முன்பதிவு செய்தேன்!", நல்ல வேளை RAC -யாவது கிடைத்தது. 2002ற்க்கு பிறகு இவ்வருடம் தான் நேரில் சென்று காணவுள்ளேன்!.

நன்றி

said...

பொருத்தமான பாராயணப் பயன் சிவமுருகன். நன்றி.

சித்திரைத் திருவிழாவைக் கண்ட களித்த பின்னர் அதனைப் பற்றி பதிவில் சொல்லுங்கள்.

said...

//பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே//

அன்னையை அடைந்த பின் அவளிடம் இல்லாததுதான் எது? மீனாட்சி அம்மையின் படம் மிக அழகு!

said...

உண்மை தாம் கவிநயா அக்கா. எதை தெரிந்து கொண்டால் தெரிந்து கொள்ள வேறொன்றும் இல்லையோ எதை அடைந்து விட்டால் அடைய வேறொன்றும் இல்லையோ என்று வேதங்கள் சொல்லும் பொருள் அன்னையே அன்றோ?