Wednesday, March 26, 2008

என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் (பாடல் 85)


காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும். வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே. 'உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே' என்று சொல்லுவார் நம்மாழ்வார். பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர். தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்தப் பாடலில் வடித்துத் தருகிறார்.

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே


பார்க்கும் திசைதொறும் - நான் பார்க்கின்ற திசையிலெல்லாம் தெரிவது

பாசாங்குசமும் - அன்னை ஏந்திய பாசமும் அங்குசமும்

பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் - பனியைப் போன்ற மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டிருக்கும் வாடாத ஐந்து மலர்க்கணைகளும்

கரும்பும் - கரும்பு வில்லும்

என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் - என் அல்லல்களை எல்லாம் தன் கருணையால் தீர்க்கும் திரிபுரசுந்தரியின் திருமேனியும்

சிற்றிடையும் - சிறு இடையும்


வார்க்குங்கும முலையும் - கச்சை அணிந்த குங்குமம் அப்பிய முலைகளும்


முலைமேல் முத்து மாலையுமே - அந்த முலைகளின் மேல் அணிந்த முத்து மாலைகளுமே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பார்த்திருமே என்று நிறைய இந்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் மாலையுமே என்று நிறைய அடுத்தப் பாடல் மாலயன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பார்க்கும், ஆர்க்கும், தீர்க்கும், வார்க்குங்கும

மோனை: பார்க்கும் - பாசாங்குசமும் - பனிச்சிறை, ஆர்க்கும் - ஐந்தும் - அல்லல், தீர்க்கும் - திரிபுரையாள் - திருமேனியும், வார்க்குங்கும - முலையும் - முலை - மேல் - முத்து - மாலையுமே.

8 comments:

said...

பார்த்தவுடன் பரவசம் தரும் அன்னையின் சாந்த முகம், அளவிலா அமைதி தருகின்றன.

said...

அழகுமிகு அபிராமி அந்தாதியை சுவைபடத் தந்து வருகிறீர்கள்! நன்றி!

said...

குமரா!
பனிச்சிறை வண்டு ஆர்க்கும் - இப்போ நன்கு விளங்கியது.

said...

ஜீவா,

இந்தப் பாடலில் சொன்னது போல் ஒரு நொடியேனும் எல்லாத் திசைகளிலும் அன்னையின் திருவுருவம் தென்பட்டிருந்தால் அன்றி நீங்கள் சொல்லும் அளவிலா அமைதி அன்னையின் திருமுகத்தைக் காணும் போது தோன்றாது.

said...

மிக்க நன்றி கவிநயா.

said...

நானும் பொருள் எழுதுவதற்கு முன் ஒரு நொடி தயங்கினேன் யோகன் ஐயா. 'பூவின் மேல் பனித்துளி இருக்கின்றதைச் சொல்கிறாரோ? அந்தப் பனியால் நனைந்த சிறகினை உடைய வண்டினைச் சொல்கிறாரோ? அப்படி நனைந்த சிறகென்றால் வண்டு ஆர்க்க இயலுமா?' என்று ஒரு சிந்தனை. சிந்தித்துக் கொண்டே சாளரத்தின் வழியே வெளியே பார்க்க வீழ்ந்துக் கொண்டிருந்த வெண்பனி (உறைபனி) மெதுவாகப் பறந்து பறந்து தரையைத் தொடுவதைப் பார்த்தேன். இந்தப் பொருளை எழுதினேன். தன்னைத் தானே பாடுவித்துக் கொண்டவளே இங்கே பொருளும் எழுதுகிறாள்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அல்லல் எல்லாம் அகலும்'.

said...

பொருத்தமான பயன். நன்றி சிவமுருகன்.