Wednesday, February 13, 2008

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் (பாடல் 76)


குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் - எல்லா நேரங்களிலும் உன் திருவுருவங்களையே மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.


நின் குறிப்பு அறிந்து - உன் திருவருளைத் துணையாகக் கொண்டு

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி - யமன் வரும் வழியினை அடைத்துவிட்டேன். இனி எனக்கு மரணம் இல்லை.


வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் - வண்டுகளால் துளைக்கப்பட்டு வெறியூட்டும் தேன் சொட்டுகின்ற கொன்றைப்பூக்களைச் சூடிய திருமுடியை உடைய சிவபெருமானின்


ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் - உடம்பில் ஒரு பாகத்தை உன் உரிமையாகக் கொண்டு அங்கே குடிபுகுந்தாய்


பஞ்ச பாண பயிரவியே - ஐந்து மலர்க்கணைகளைக் கொண்டு உலக நடப்பை எல்லாம் நடத்தும் அம்மையே

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் குறித்தவரே என்று நிறைய இந்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பயிரவியே என்று நிறைய அடுத்தப் பாடல் பயிரவி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குறித்தேன், மறித்தேன், வெறித்தேன், பறித்தே

மோனை: குறித்தேன் - கோலம் - குறிப்பு, மறித்தேன் - மறலி, வெறித்தேன் - வேணிப்பிரான், பறித்தே - பஞ்ச - பாண - பயிரவியே.

6 comments:

said...

//மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி - யமன் வரும் வழியினை அடைத்துவிட்டேன். இனி எனக்கு மரணம் இல்லை.//

அதனால் பிறவிவும் இல்லை. எனவே அபிராமி பிறப்பறுக்கும் தெய்வம்.

said...

ஆம் ஐயா. 'இனி யான் பிறப்பின் நின் குறையே அன்றி யார் குறை காண்' என்று முன்பு சொன்னவர் இங்கே இறப்பில்லை என்று சொன்னதும் அந்த வகையில் தான். அன்னை அபிராமி பிறப்பிறப்பு அறுக்கும் தெய்வம்.

said...

பஞ்ச பாண பயிரவியே - பஞ்சதன்மாத்ரசாயகா என்பதை எப்படி அழகாக சொல்லியிருக்கார். நன்றிங்க குமரன்.

said...

பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே என்பதால், இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய் 'தனக்குரிய பொருள் தப்பாமல் வந்துசேரும்'.

said...

ஆமாம் மௌலி. நானும் பஞ்ச பாண பயிரவியே என்று படித்த போது உங்கள் பதிவினில் படித்த பஞ்ச தன்மாத்ர சாயகா என்ற திருப்பெயரையும் நினைத்துக் கொண்டேன். நன்றிகள்.

said...

பின்னூட்டத்தை மட்டும் படித்துவிட்டு எப்படி இது பொருந்தும் என்று எண்ணினேன் சிவமுருகன். மீண்டும் பாடலைப் படித்த போது தான் 'கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும்' என்பது எப்படி 'தனக்குரியதை'க் காட்டுகிறது என்று புரிந்தது. :-) நீங்கள் சொன்னது போல் மிகப் பொருத்தமான பயன்.