Sunday, February 24, 2008

கயவரோடு இனி என்ன கூட்டு? (பாடல் 79)


எல்லாம் வல்ல தெய்வத்தை வழிபட விரும்பும் மனம் நமக்கு இருக்கிறது. அப்படி இருந்தும் தெய்வத்தை நம்பாமல் கிண்டலும் கேலியும் பேசி பழி பாவங்களே செய்து நரக வழியிலேயே செல்ல விரும்பும் கயவர்களோடு நமக்கு ஏன் கூட்டு மனமே?

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு - அபிராமவல்லியின் திருவிழிகளுக்கு எம் மேல் தனிப்பட்ட அருள் கட்டாயம் இருக்கிறது.

வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு - நமக்கோ வேதங்கள் காட்டுகின்ற வழிகளிலேயே அவளை வழிபட மனம் உண்டு.


அவ்வழி கிடக்க - அப்படிப்பட்ட நல்வழிகள் இருக்கும் போது

பழிக்கே சுழன்று - தேவையின்றி கெட்ட வழியிலேயே திரிந்து

வெம்பாவங்களே செய்து - கொடிய பாவங்களையே செய்து

பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் - பாழும் நரகக் குழியிலேயே அழுந்தி வாடும்


கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே - கெட்டவர்கள் தம்மோடு இனி என்ன தொடர்பு?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விழிக்கே என்று நிறைய இந்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கூட்டினியே என்று நிறைய அடுத்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விழிக்கே, வழிக்கே, பழிக்கே, குழிக்கே

மோனை: விழிக்கே - உண்டு - வல்லிக்கு - வேதம், வழிக்கே - வழிபட - உண்டு - வழிகிடக்க, பழிக்கே - பாவங்களே - பாழ்நரக, குழிக்கே - கயவர் - கூட்டினியே

20 comments:

said...

குமரன், இந்தப் பாடலையும் விளக்கத்தையும் படித்தேன். நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக எளிய பாடல்.

said...

நன்றி இராகவன். எளிமையான பாடல் தான்.

said...

நல்ல கருத்து :-)

said...

இல்லையா பின்ன? இப்படி எல்லாம் தலைப்பும் கருத்தும் இருந்தாத் தான் நீங்க எல்லாம் என் பதிவு பக்கமே வர்றீங்க. இல்லையா உஷா? :-)

இந்தக் கருத்து என் சொந்தக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் அபிராமி பட்டரின் இந்தப் பாடலில் 'தெய்வத்தை நம்பாமல் கிண்டலும் கேலியும் பேசி' என்ற பகுதி மட்டும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். :-)

said...

ஹூம்! இந்தப் பாடலை முன்னர் திருக்கடவூரிலே ஒருவர் பாடியும் கேட்டுள்ளேன் குமரன்!
இங்கே கூடாநட்பு அதிகாரத்தில் வரும் குறட்பாக்களோடும் ஒப்பிட்டும் பார்க்கின்றேன்!

திடீர் என்று கயவர் கூட்டு பற்றிச் சொல்கிறாரே, அபிராமி பட்டர்! இதற்குப் பின்புலம் ஏதாச்சும் உண்டா குமரன்? முந்தைய பாட்டிலும் ஒரு குறிப்பும் இல்லை!

said...

நல்ல கேள்வி இரவிசங்கர். எனக்கும் இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதும் போது இந்தக் கேள்வி வந்தது. முன்னும் பின்னும் எந்தக் காரணமும் தென்படவில்லை.

நம் நண்பர் ஜீவா இந்தப் பாடலுக்கு எப்படி பொருள் சொல்லியிருப்பார் என்று எண்ணிப்பார்த்ததில் இப்படி தோன்றியது. (ஜீவா. கோவித்துக் கொள்ளாதீர்கள். சும்மா உங்களையும் வம்புக்கு இழுத்துப் பார்க்கலாமே என்று தான். :-) )

இங்கே 'பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்' ஐம்புலன்கள். அம்மையின் விழியின் அருளும் வேதம் சொன்ன வழியில் வழிபட நெஞ்சும் இருந்தும் இந்த ஐம்புலக் கயவர்களோடு என்ன கூட்டு இனிமேலும் என்று தன்னைத் தானே அபிராமி பட்டர் கேட்கிறார் என்று ஒரு பொருள் சொல்லலாம். அதுவே சரியான பொருளாகவும் இருக்கலாம்.

மற்ற அருளாளர்களும் ஐம்புலக்கயவர்கள் என்று பாடியிருப்பதால் இந்தப் பொருள் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

said...

பாடலும், உங்களுடைய ஜிவா விளக்கமும் சூப்பர். :-)

said...

what is going on here
some 'uLkuthu' related to recent thamizhmanam posts and fights ?

said...

நன்றி மௌலி. ஜீவா இன்னும் இந்த இடுகையைப் பார்க்கவில்லை போல. :-)

said...

//what is going on here
some 'uLkuthu' related to recent thamizhmanam posts and fights ?

//

Regular reading of Abirami andhaathi is going on here.

said...

இப்போதுதான் பார்க்கிறேன் குமரன்!
ஒரு விளக்கத்துக்கு நானும் பயன்பட்டு இருக்கிறேன், வாவ்!
இதில் மேலும் ஆச்சரியம் என்றால் இது போலவே - அந்த பாரதி பாடலிலும் விளக்கம்!
- எல்லாம் அவன் செயல் - வேறொன்றும் யானறியேன் பராபரமே.

"தொண்டரோடு கூட்டு கண்டாய்" என்னும் சொற்கள் ஏனோ மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன!

said...

இந்த விளக்கம் நீங்கள் சொல்லும் விளக்கம் போலவே இருக்கின்றதா ஜீவா?! மிக்க மகிழ்ச்சி.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பந்தம் அறுக்கும்'.

said...

பொருத்தமான பயனைச் சொன்னதற்கு நன்றிகள் சிவமுருகன்.

said...

கே.ஆர்.எஸ். கேட்ட கேள்வி இன்னொரு கோணத்தில் சிந்தக்கவைத்தது. ஒருவேளை பட்டரைப் பற்றி சரபோஜி மன்னனிடம் புகார் செய்தார்களே அவர்களைக் குறிப்பிட்டிருப்பாரோ?

said...

அபிராமி பட்டர் இந்தப் பாடலைப் பாடும்போதுதான் அன்னை தன் காதணியை வானத்தில் வீசினாள்.. அது முழுநிலவாய்ப் பிரகாசித்து அமாவாசை இரவைப் பௌர்ணமியாக்கிக் காட்டியது. (அபிராமி பட்டர் அன்றைய அமாவாசைத் திதியைப் பௌர்ணமி என்று அரசனிடம் போது முழுநிலவைக் காட்டாவிட்டால் பட்டரைத் தீயிலிட ஆணையிட்டிருந்தார் சரபோஜி மன்னர்.)

said...

சேதுக்கரசி.

அன்னை தன் திருக்காதணியை வீசி நிலவைக் காட்டியது இந்தப் பாடலைப் பாடும் போது தான் என்பதால் நீங்கள் சொல்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. மிக்க நன்றி.

said...

//இங்கே 'பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்' ஐம்புலன்கள். அம்மையின் விழியின் அருளும் வேதம் சொன்ன வழியில் வழிபட நெஞ்சும் இருந்தும் இந்த ஐம்புலக் கயவர்களோடு என்ன கூட்டு இனிமேலும் என்று தன்னைத் தானே அபிராமி பட்டர் கேட்கிறார் என்று ஒரு பொருள் சொல்லலாம்.//

இந்த விளக்கம் பொருத்தமாகத் தெரிகிறது, குமரன்.

said...

நன்றி கவிநயா அக்கா.

said...

http://open.spotify.com/album/1u45LISSVhrR7kD25Dd75b