Friday, February 29, 2008

ஆடகத் தாமரை ஆரணங்கே (பாடல் 80)


முதலில் அடியார் கூட்டத்தில் சேர்தல்; அந்த சேர்தலையே காரணமாகக் கொண்டு இறைவியின் திருவருள் வருதல்; அந்தத் திருவருளால் அவளது திருவுருவைக் காட்டுதல்; அப்படிக் கண்ட காட்சியில் கண்ணும் மனமும் களித்தல்; அந்தக் களிப்பில் நடம் ஆடுதல் - என்று இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையிலேயே நடக்கிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று அருளாளர்கள் சொன்னதைப் போல்.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே


கூட்டியவா என்னைத் தன் அடியாரில் - என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்ததையும்

கொடிய வினை ஓட்டியவா - எனது கொடிய வல்வினைகளை ஓட்டியதையும்

என் கண் ஓடியவா - என்னை நோக்கி ஓடி வந்து அருள் செய்ததையும்

தன்னை உள்ள வண்ணம் காட்டியவா - உனது மெய்யுருவை உள்ளவண்ணம் காட்டியதையும்

கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா - அப்படித் திருவுருவைக் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றதையும்

ஆட்டியவா நடம் - அந்தக் களிப்பில் என்னை நடம் ஆட்டிவைப்பதும் (என்னே உன் கருணை?)

ஆடகத் தாமரை ஆரணங்கே - பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகானவளே

***

இந்தப் பாடலில் கூட்டியவாறும், ஓட்டியவாறும், ஓடியவாறும், காட்டியவாறும், களிக்கின்றவாறும், ஆட்டியவாறும் என்ற சொற்கள் ஈறு கெட்டு கூட்டியவா, ஓட்டியவா, ஓடியவா, காட்டியவா, களிக்கின்றவா என்று நின்றன.

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கூட்டினியே என்று நிறைய இந்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆரணங்கே என்று நிறைய அடுத்தப் பாடல் அணங்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டியவா

மோனை: கூட்டியவா - கொடியவினை, ஓட்டியவா - ஓடியவா - உள்ளவண்ணம், காட்டியவா - கண்ட - கண்ணும் - களிக்கின்றவா, ஆட்டியவா - ஆடக - ஆரணங்கே.

10 comments:

said...

/////எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டியவா
மோனை: கூட்டியவா - கொடியவினை, ஓட்டியவா - ஓடியவா - உள்ளவண்ணம், காட்டியவா - கண்ட - கண்ணும் - களிக்கின்றவா, ஆட்டியவா - ஆடக - ஆரணங்கே.////

இதெல்லாம் தேடிப்பிடித்துப் போடப்பெற்ற சொற்கள் அல்ல!
இயற்கையாகவே வந்து விழுகின்றவையாகும்!

கவி காளமேகம், கவியரசர் கண்ணதாசன் போன்ற சில குறிப்பிட்டவர்களுக்கே
இது சாத்தியப்பட்டுள்ளது.

அது தெய்வ அருள்! அவர்களெல்லாம் தெய்வாம்சம் பொருந்திய கவிஞர்கள்!

said...

உண்மை தான் வாத்தியார் ஐயா. தெய்வ அருள் இருந்தால் எந்த மொழியும் அழகாக வசமாகும்.

said...

குமரா!
இவர்கள் திருவருளால் மொழியை தமக்குச் சேவகம் செய்ய வைத்தவர்கள்.
இவற்றைக் கற்காததால் இன்றையோர்
கடித்துக் குதறுகிறார்களே

said...

படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் - என்று சொல்வது போல் பலரும் மொழியைக் கடித்துக் குதறுவதும் நடக்கத் தான் செய்கிறது யோகன் ஐயா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நிலையான மனமகிழ்ச்சி உண்டாகும்'.

said...

பொருத்தமான பயனைச் சொன்னதற்கு நன்றிகள் சிவமுருகன்.

said...

//நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையிலேயே நடக்கிறது.//

ஆமாம், அவள் தாள் பணியவும் அவள் அருள்தானே வேண்டியிருக்கிறது?

said...

உண்மை தான் கவிநயா அக்கா. நன்றி.

said...

//கூட்டியவா என்னைத் தன் அடியாரில்//
"என்னே உன் கருணை?" அப்படின்னு நாம பாட்டுக்கு சும்மா ஈசியா பொருள் எழுதிட்டு போயிடலாம். (தப்பா எடுத்துக்காதீங்க குமரன். :-). நிச்சயம் உணர்ந்து தான் பொருள் எழுதி இருப்பீங்க. வேறு யாருக்காவது இந்த பின்னூட்டம் சுவாரஸ்யம் அளிக்கும் அப்படின்னு நினைச்சு இடறேன்.)
இந்த அருளிச் செயல் எத்தன்மையது என்று புரிந்து கொள்ள வேறு சில அடியார்களின் நிலைகளை பார்த்தால் போதும்.
"உந்தன் அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் !" என்று மாணிக்க வாசகர் கேட்கிறார். ("உடையாள் உந்தன் நடுவிருக்கும்..." என தொடங்கும் திருவாசகப் பாடல்.)
குலசேகர ஆழ்வாரும் அரங்கன் தொண்டர்களை என்று காண்பேனோன்னு ஏங்கி சில பாசுரங்களை பாடி இருக்காரு. ("தேட்டு அருந் திறல் தேனினை..." என்று தொடங்கும் ) அடியார் குழாம்-ல member ஆகனும்னா ரொம்ப கெஞ்சி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணனும் போல. :-)

said...

உண்மை தான் இராதா. அப்படி கெஞ்சிக் கூத்தாடிப் பெறக்கூடிய அடியார் குழாத்தின் அண்மை மிக எளிதாகக் கிடைத்ததென்றால் அது அன்னையின் அருளின்றி வேறு எது? அன்னையின் கருணை தான் காரணம்.