Monday, April 07, 2008

விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற திருவுருவம் (பாடல் 87)




மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் - எத்தனை தான் சொன்னாலும் உன் பெருமை சொல்லி முடியாது என்ற வகையில் மொழிக்கு எட்டாமலும், எந்த வகையில் நினைத்தாலும் உன் திருவுருவை எண்ணி முடியாது என்ற வகையில் நினைவுக்கு எட்டாமலும் இருக்கும் உன் திருவுருவம்



எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் - என்னுடைய முன்வினைகளின் தடைகளையும் மீறி எந்தன் விழிகள் காணும்படி என் முன் நிற்கின்றதே! இது என்ன வியப்பு?!



விழியால் மதனை அழிக்கும் தலைவர் - தன்னுடைய நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த எங்கள் தலைவராம் சிவபெருமானின்


அழியா விரதத்தை - என்றும் தீராத தவமென்னும் விரதத்தை


அண்டம் எல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - உடம்பின் இடப்புறத்தில் ஒரு பாகத்தையே கொண்டு இந்த அம்மை நிற்க அதன் பின்னரும் தவம் செய்வாரும் உளரோ என்று உலகம் எல்லாம் பழிக்கும் படி நிற்கின்ற பரதெய்வத்திற்கும் பரதெய்வமானவளே.

அம்மையே உன் திருவுருவம் மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத திருவுருவம். அந்தத் திருவுருவத்தின் பெருமைச் சொல்லி முடியாது. மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானின் தவத்தையே உலகோர் பழிக்கும் படி செய்யும் பேரழகுடைய திருவுருவம் நின் உருவம். அப்படிப் பட்ட வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவம் என்னுடைய முன்வினைப்பயன்கள் என்னும் தடைகளையும் மீறி என் கண்களுக்கு முன்னர் வந்து நிற்கின்றது என்றால் அது என்னுடைய முயற்சியாலும் தவத்தாலும் ஏற்பட்டது இல்லை. உன்னுடைய அளவில்லாத பெருங்கருணையாலே மட்டும் நடக்கின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பணிமொழியே என்று நிறைய இந்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பராபரையே என்று நிறைய அடுத்தப் பாடல் பரமென்று என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மொழிக்கும், விழிக்கும், அழிக்கும், பழிக்கும்

மோனை: மொழிக்கும் - மூர்த்தம், விழிக்கும் - வினைக்கும் - வெளி - விழியால், அழிக்கும் - அழியா -அண்டம், பழிக்கும் - பாகம் - பராபரையே.

7 comments:

said...

great Kumaran

said...

நன்றி ஐயா. பெயர் போட்டு எழுதியிருக்கலாமே. பார்ப்பவர்களில் யாராவது நானே இந்தப் பின்னூட்டத்தைப் போட்டுக் கொண்டேன் என்று நினைக்கப் போகிறார்கள். :-)

said...

//மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் //

அருமையான விளக்கம்.

said...

நன்றி கவிநயா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'செயற்க்ரிய செயல்களைச் செய்து புகழ் பெறலாம்'.

said...

மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று உலகமெல்லாம் வியந்து கொண்டிருக்க அந்த மன்மதனை விழியால் எரித்தவரையே வென்றவளை இந்தப் பாடல் வணங்குவதால் 'செயற்கரிய செயல்கள் செய்து புகழ் பெறலாம்' என்ற பயன் பொருத்தமானது சிவமுருகன்.

said...
This comment has been removed by a blog administrator.