Tuesday, April 29, 2008

இனி எனக்குக் கிடைக்காத பொருள் எதுவுமில்லை (பாடல் 90)


வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே


வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து - நான் பிறப்பிறப்பு சூழலில் தொடர்ந்து வருந்தாத வகையில் என் மனத்தையே அவள் வீற்றிருக்கும் தாமரையாகக் கொண்டு அவளாக அவள் கருணையினால் வந்து புகுந்து

இருந்தாள் பழைய இருப்பிடமாக - பல நாட்களாகப் பழகிய பழைய இருப்பிடத்தைப் போல் நிலையாக அமர்ந்துக் கொண்டாள்

இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை - இனி எனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. நான் அப்படியே விரும்பினாலும் கிடைக்காத பொருள் எதுவும் இல்லை.

விண் மேவும் புலவருக்கு - விண்ணில் வாழும் அறிவில் சிறந்த புலவராம் தேவர்களுக்கு

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே - விருந்தாக கடலில் விளைந்த மருந்தான அமுதத்தைப் பெற்றுத் தரும் மென்மையான இயல்புடையவளே.

கிடைத்தற்கு அரியது கடல் மருந்தான அமுதம். அதனையே அன்னை விண்ணவர்களுக்குப் பெற்றுத் தந்தாள். மோகினி உருவமாக பெருமாள் அந்த அமுதத்தைத் தேவர்களுக்குத் தந்ததாகப் புராணம் சொல்லும். அந்த மோகினி இந்த அபிராமி தான் என்கிறார் பட்டர். அப்படி கிடைத்தற்கரிய அமுதத்தையே பெற்றுத் தருபவள் என் மனத்தாமரையில் பழைய இருப்பிடம் போல் பல நாள் பழகிய இருப்பிடம் போல் வந்து அமர்ந்த பின்னர் எனக்கு வேறு ஏது குறை?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வருந்தியுமே என்று நிறைய இந்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கியது. இந்தப் பாடல் மெல்லியலே என்று நிறைய அடுத்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வருந்தாவகை, இருந்தாள், பொருந்தாது, விருந்தாக

மோனை: வருந்தா - வகை - வந்து, இருந்தாள் - இருப்பிடமாக - இனி, பொருந்தாது - பொருள் - புலவருக்கு, விருந்தாக - வேலை.

9 comments:

said...

நல்ல கவித்துவமான பாடல் - எதுகைகளும் சிறப்பு!
புகுந்து, இருந்து, அந்த இடம் சலிக்காமல், பழைய இடமாகும் வரை வசித்திருக்கிறாள் என்றால் பட்டர் பாக்கியசாலியே!

said...

படத்தில் அன்னை அழகோ அழகு!

//வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக //

இது எனக்கு ரொம்பப் பிடித்தது. பட்டரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, அவரோடு ஒப்பிட்டுக் கொள்ள கடுகளவு தகுதியும் இல்லையென்றாலும்...

said...

அன்னையின் மாயா சக்தியே மாலவன்...அதனால் தான் அப்படிச் சொன்னாரோ?.. :)

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிரிந்த தம்பதிகள் மனம் ஒன்றி மகிழ்ந்து கூடலாம்'.

said...

உண்மை தான் ஜீவா. நன்றி.

said...

அருளாளர்களின் பாடல்களைப் படிப்பதும் கேட்பதும் மனனம் செய்வதும் பாடுவதும் அதே நிலையை விரைவில் அடைய வேண்டும் என்பதற்காகத் தானே கவிநயா அக்கா. கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியை நினைத்து நினைத்துப் பின்னர் வண்ணத்துப்பூச்சியாகவே ஆவது போல் என்று தான் அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே.

said...

விஷ்ணு மாயையே துர்க்கை என்று படித்திருக்கிறேன். நீங்கள் மாற்றிச் சொல்வது போல் தோன்றினாலும் ஏறக்குறைய அதனையே தான் சொல்லியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் மௌலி. சரிதானா? :-)

said...

பாராயணப் பயனைச் சொன்னதற்கு நன்றிகள் சிவமுருகன்.

said...

//கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியை நினைத்து நினைத்துப் பின்னர் வண்ணத்துப்பூச்சியாகவே ஆவது போல் //

நன்றாகச் சொன்னீர்கள் குமரன்!