Tuesday, May 06, 2008

அடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் (பாடல் 91)


மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

மெல்லிய நுண் இடை மின்னனையாளை - மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை


விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன்னனையாளை - விரிசடைக்கடவுளாகிய சிவபெருமானால் அணைக்கப்பட்ட மெல்லிய முலையை உடைய பொன் போன்றவளை


புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் - புகழ்ந்து வேதங்கள் சொன்ன முறைப்படி தொழுகின்ற


அடியாரைத் தொழுமவர்க்கு - அடியவர்களைத் தொழும் அடியார்க்கடியாருக்கு


பல்லியம் ஆர்த்தெழ - பலவித இசைக்கருவிகள் முழங்கி வர

வெண்பகடு ஊரும் பதம் தருமே - வெள்ளையானையாம் ஐராவதத்தின் மேல் ஏறி ஊர்ந்து வரும் பதவியாகிய இந்திரப் பதவியைத் தருவாள்.

அடியவர்களுக்கு அன்னை அருளும் பதங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பட்டர் இந்தப் பாடலில் அந்த அடியவரைத் தொழுபவர்களுக்கு என்ன பதம் கிடைக்கும் என்று சொல்கிறார். மெல்லிய நுண்ணிய இடையும், இறைவரால் அணைக்கப்பட்ட மென்முலையும் கொண்ட மின்னலையும் பொன்னையும் ஒத்த இறைவி, அவளை முறைப்படித் தொழும் அடியவர்களைத் தொழுபவர்களுக்கு, இந்திர பதவி முதலிய செல்வங்களை அருளுவாள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் மெல்லியலே என்று நிறைய இந்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கியது. இந்தப் பாடல் பதந்தருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பதத்தே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மெல்லிய, புல்லிய, சொல்லிய, பல்லியம்

மோனை: மெல்லிய - மின்னனையாளை, புல்லிய - பொன்னனையாளை - புகழ்ந்து, சொல்லிய - தொழும் - தொழுமவர்க்கு, பல்லியம் - பகடூரும் - பதந்தருமே.

6 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும்'.

said...

ஐராவதம் ஏறலாம் என்றதால் இந்தப் பயனோ? :-) நன்றி சிவமுருகன்.

said...

அழகான பாடல். அருமையான விளக்கம். "பல்லியம் ஆர்த்தெழ" என்ற பிரயோகம் எனக்குப் பிடித்தது.

அடியவர்களைத் தொழுதாலே இப்படியென்றால், அன்னையைத் தொழுவோருக்கு? ஆனால் அவள் அடிகள் பணிந்தபின் இந்திர பதவியை நாடுவோரும் உண்டோ?

said...

//ஐராவதம் ஏறலாம் என்றதால் இந்தப் பயனோ? :-) நன்றி சிவமுருகன்//

தேவலோக அரசே நமதானால் இவ்வுலக அரசாங்க காரியங்கள் எம்மாத்திரம்! அகவே தான் இந்த பயன் :)

said...

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றிருப்பார்கள் அடியார்கள் என்று சொல்கிறீர்களா கவிநயா அக்கா?! சரி தான்.

said...

ஆமாம் சிவமுருகன். நன்றி.