
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே
இடங்கொண்டு விம்மி - தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி
இணை கொண்டு - ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து
இறுகி இளகி - இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும்
முத்து வடங்கொண்ட - முத்து மாலையை அணிந்தும் இருக்கும்
கொங்கை மலை கொண்டு - மலைகள் என்னும் படியான கொங்கைகளைக் கொண்டு
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட - நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்த
கொள்கை நலம் கொண்ட நாயகி - பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே
நல் அரவின் படம் கொண்ட அல்குல் - நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட
பனி மொழி வேதப் பரிபுரையே - குளிர்ந்த பேச்சினையுடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே.
**
அந்தாதித் தொடை: இடவே என்று சென்ற பாடல் நிறைந்தது; இந்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கியது. இந்தப் பாடல் பரிபுரையே என முடிகிறது; அடுத்தப் பாடல் பரிபுரச் சீறடி என்று தொடங்குகிறது.
எதுகை: இடம் கொண்டு, வடம் கொண்ட, நடம் கொண்ட, வடம் கொண்ட என்று இரண்டிரண்டு எதுகைகளாக அமைத்திருக்கிறார்.
மோனை: இடம் - இணை - இறுகி - இளகி, வடம் - வலிய, ந்டம் - நலம் - நாயகி - நல், படம் - பனி - பரிபுரை.
மற்றைய அணிகள்:
கொண்டு/கொண்ட என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
வலிய நெஞ்சைப் பொருதுவதற்கு மலை தானே வேண்டும். அதனையும் சொல்கிறார்.
இறுகி இளகி என்று முரண் தொடையைக் காட்டுகிறார்.
அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு.





