Wednesday, January 10, 2007

மணியே! மணியின் ஒளியே! (பாடல் 24)



மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

மணியே - மாணிக்க மணியே!

மணியின் ஒளியே - மாணிக்க மணியின் ஒளியே!

ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!

அணியும் அணிக்கு அழகே - அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!

அணுகாதவர்க்குப் பிணியே - நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

பிணிக்கு மருந்தே - உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

***

உலக இன்பம் வேண்டி அல்லவா இறையை அன்றி மற்றவற்றையும் மற்றவர்களையும் பணிவது? உன்னைப் பணிந்த பின் மற்றவரைப் பணியேன் என்றது உலக இன்பங்கள் உன்னைப் பணிந்தததால் தானே கிடைக்கும்; அதனால் இறையைத் தவிர மற்றவரைப் பணியும் தேவை இல்லை என்பதைச் சொல்லியது.

Friday, December 29, 2006

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது! (பாடல் 23)


கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது - உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன்

அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் - உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)

பரசமயம் விரும்பேன் - உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன்.

வியன் மூவுலகுக்கு உள்ளே - மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே

அனைத்தினுக்கும் புறம்பே - இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே

(அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)

உள்ளத்தே விளைந்த கள்ளே - உள்ளத்தில் விளைந்த அமுதமே

களிக்கும் களியே - எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே

அளிய என் கண்மணியே - எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே

கொடியே இளவஞ்சிக் கொம்பே (பாடல் 22)



கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

கொடியே - கொடி போன்றவளே!

இளவஞ்சிக் கொம்பே - இளமையான வஞ்சிக் கொம்பே!

எனக்கு வம்பே பழுத்த படியே - தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!

மறையின் பரிமளமே - வேதங்களின் மணமே!

பனி மால் இமயப் பிடியே - பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே!

பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே - பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.

Sunday, October 01, 2006

மங்கலை செங்கலசம் முலையாள் (பாடல் 21)



மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே

மங்கலை - மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.

செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே.

மலையாள் - மலைமகளே. இமயத்தரசன் மகளே.

வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் - வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே

உடையாள் - எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.

பிங்கலை - பொன்னிறத்தவளே.

நீலி - நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.

செய்யாள் - சிவந்தவளே.

வெளியாள் - வெண்மை நிறம் கொண்டவளே.

பசும் பெண்கொடியே - பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.

***

இந்தப் பாடல் முழுக்க முழுக்க தோத்திரமாகவே அன்னையில் புகழைப் பாடுவதாகவே அமைந்திருக்கிறது.

உலகத்தில் எத்தனையோ குணநலன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம் தந்து உருவகித்துப் பேசுவது மரபு. அந்த எல்லா குணநலன்களும் அன்னையே; அவளிடமிருந்து தோன்றியவையே என்று குறிப்பால் உணர்த்தும் முகமாக அபிராமி பட்டர் அன்னையை 'பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே' என்கிறார் போலும்.

Wednesday, March 08, 2006

157: உறைகின்ற நின் திருக்கோயில் (பாடல் 20)


உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

உறைகின்ற நின் திருக்கோயில் - அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது

நின் கேள்வர் ஒரு பக்கமோ - உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ - ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ - அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?

கஞ்சமோ - தாமரை மலரோ?

எந்தன் நெஞ்சகமோ - என்னுடைய நெஞ்சமோ?

மறைகின்ற வாரிதியோ - எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?

பூரணாசல மங்கலையே - எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!

எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிர்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? தாமரை மலரோ? என்னுடைய நெஞ்சமோ? எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? நீ எங்கும் நிறைந்தவளானாலும் மேலே சொன்னவிடங்களில் நீ மகிழ்ந்து உறைகின்றாய் போலும்.

Wednesday, February 15, 2006

147: ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? (பாடல் 19)

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து - நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)

விழியும் நெஞ்சும் - பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.

கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது - உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.

என்ன திருவுளமோ? - உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே. நான் வேண்டியவுடன் வான வெளியில் மாதொருபாகனாக திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவேயில்லை. கருத்தினுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் திறம் தான் என்னே?

Friday, February 10, 2006

144: காலன் வரும்போது வெளி நிற்கவே (பாடல் 18)

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் - உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,

உங்கள் திருமணக்கோலமும் - உங்கள் திருமணக் கோலத்துடனும்

சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து - என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து

வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே - கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.